ஓபிஎஸ் பக்கம் செல்கிறேனா? கேபி முனுசாமி சொன்ன வார்த்தை.. எடப்பாடி பழனிசாமி நிம்மதி!
சென்னை: எப்போதும் அணி மாறிக் கொண்டிருக்கும் அளவுக்கு தான் ஒன்றும் தரம் தாழ்ந்து போகவில்லை என கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல் காரணமாக ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி பிரிந்து தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் தொண்டர்களின் பலம் யாருக்கு என்பதில் இரு தரப்பும் தொடர்ந்து மோதி வருகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி , தொண்டர்களின் பலமும், நிர்வாகிகளின் பலமும் தனக்கு இருக்கிறது என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

அதிகரிக்கும் ஓபிஎஸ் பலம்
ஆனால் நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே போராடி வந்த ஓபிஎஸ் பக்கம் திடீரென எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சாய்ந்து வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் எம்பி மைத்ரேயன் ஓபிஎஸ் அணியில் இணைந்த நிலையில், முன்னாள் எம்எல்ஏ-க்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 12 நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். டெல்லி மேலிட ஆதரவு ஓபிஎஸ் பக்கம் இருப்பதால், நாளுக்கு நாள் அவரது கைகள் ஓங்கி வருகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி அணி கவலையில் இருந்தது.

ஓபிஎஸ் பக்கம் கேபி முனுசாமி?
இதனிடையே எடப்பாடி பழனிசாமி அணியின் முக்கிய நிர்வாகியாக உள்ள கேபி முனுசாமி, ஓபிஎஸ் பக்கம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஓ பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது, கேபி முனுசாமி அவர் பக்கம் இருந்து பல்வேறு முடிவுகளை எடுத்தவர். ஆனால் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் கேபி முனுசாமி எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கிறார். இதனால் அவருக்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

கட்சியில் புறக்கணிப்பு
இருந்தும் கட்சியில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கேபி முனுசாமி கருதியதாக கூறப்பட்டு வந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம் ஆகியோருக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி முக்கியத்துவம் அளிப்பதால், கட்சியின் துணை பொதுச்செயலாளரான கேபி முனுசாமியை புறக்கணிப்பதாக பேசப்பட்டது. இதனால் அவர் ஓபிஎஸ் பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியது.

கேபி முனுசாமி பதில்
இந்த நிலையில் ஓபிஎஸ் அணியில் இணைவதாக வரும் தகவல்கள் குறித்து கேபி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், வைரஸ் காய்ச்சல் காரணமாகவே வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். தன்னைப் பற்றி தவறாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. எப்போதும் அணி மாறிக் கொண்டிருக்கும் அளவுக்கு நான் தரம் தாழ்ந்து போகவில்லை. ஓபிஎஸ் அணிக்குச் செல்ல மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications