‘ஒற்றைத் தலைமை’ அதிமுகவில் களைகட்டிய பஞ்சாயத்து! ‘அவர்’ வந்துருவார்? அடையாள அட்டை வழங்க திட்டம்!
சென்னை : விரைவில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ள பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு உடனடியாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை தயார் செய்யுமாறும் கட்டளையிடப்பட்டுள்ள நிலையில், ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே அதிமுகவின் தொண்டர்களில் ஒரு தரப்பினர் திடீரென கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டுமென முழக்கம் எழுப்பினர்.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், அதிமுகவின் அடுத்தக்கட்ட வளர்ச்சி குறித்து விவாதிக்க உள்ளதாகவும், திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த போரட்டக்குழு அமைப்பது, பாஜகவின் செயல்பாடுகள் குறிப்பாக சசிகலா விவகாரம் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக ஆலோசனை
இந்த நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாகவும், 'கட்சிக்கு ஒற்றைத் தலைமை' வேண்டும் என முழக்கம் எழுப்ப சசிகலா ஆதரவாளர்கள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.

காரசார விவாதம்
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்தும் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் எனும் பெயரில் சசிகலா ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர்களிடம் இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை அவசியம்
கூட்டத்தில் பங்கேற்க உள்ள பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு உடனடியாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை தயார் செய்யுமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது. அதிமுக கட்சி வரலாற்றில் முதன்முறையாக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் அனுமதியில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஒற்றை தலைமை முழக்கம்
இந்நிலையில் ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே அதிமுகவின் தொண்டர்களில் ஒரு தரப்பினர் திடீரென கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டுமென முழக்கம் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது . அப்போது சிலர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் தலைமைப் பதவி ஏற்க வேண்டும் என கூறியதால் ஆத்திரமடைந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் ஒற்றை தலைமையாக பதவி ஏற்க வேண்டும் என கட்சி அலுவலகம் முன் முழக்கமிட்டனர்.

பெரும் பரபரப்பு
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் ஒற்றைத் தலைமை முழக்கத்தால் கட்சிக்குள் மேலும் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இது குறித்து மேலும் விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என அங்கிருந்த மூத்த நிர்வாகிகள் சிலர் அறிவுறுத்தியதையடுத்து சிறிது நேரத்திலேயே சலசலப்பு அடங்கியது. ஆனால் திட்டமிட்டே சிலர் இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் நம்மிடம் பேசிய நிர்வாகிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications