ஆளுநருக்கே பாதுகாப்பில்லையா? சட்டசபையில் அதிமுக,பாஜக வெளிநடப்பு! இபிஎஸ் என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை : தருமபுரம் ஆதீன நிகழ்ச்சிக்குச் சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியதை தமிழக அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாக கூறி சட்டசபையில் இருந்து அதிமுக பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள புஷ்கரவிழாவில் பங்கேற்க மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று ஞானரத யாத்திரை புறப்பட்டார்.
இந்த யாத்திரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்த நிலையில் அவரது வருகைக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தன.

கான்வாய் மீது தாக்குதல்
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆளுநர், தனது கான்வாயோடு சென்ற நிலையில் ஆளுநரின் வாகனம் சென்றபோது அங்கு கூடி இருந்தவர்கள் கார்களை நோக்கி கொடிகளை வீசியதாகவும், அதிர்ஷ்டவசமாக பாதிப்பின்றி ஆளுநரின் பாதுகாப்பு கான்வாய் கடந்து சென்றதாக தகவல்கள் வெளியாகியன. மேலும், ஆளுநர் சென்ற வாகனத்தின் மீது கற்கள், கொடிகள் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இதனை தமிழக காவல்துறை மறுத்திருந்தது.

அதிமுக வெளிநடப்பு
இந்நிலையில் மயிலாடுதுறை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி விஸ்வேஷ் சாஸ்திரி தமிழக டிஜிபிக்கு கடிதமும் எழுதினார். இந்நிலையில் இன்று தமிழக சட்ட சபையின் பட்ஜட் தொடரின் மானிய கோரிக்கை விவாதத்தின்போது ஆளுநர் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில் தொடர்ந்து, பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்வதாக கூறினர்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சுற்றுபயணம் செய்த ஆளுநர் ரவியின் வாகனம் மனமங்கலம் என்ற இடத்தில் கடந்த போது போராட்டக்காரர்கள் ஆளுநர் வாகனம் மீதும், காவல்துறையினர் மீதும் கற்களையும், கம்புகளையும் வீசி தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கதக்கது . ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தது தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தவில்லை

காவல்துறைக்கு கரும்புள்ளி
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்தது வருந்தத்தக்கது வேதனை அளிக்கக்கூடிய செய்தி. ஆளுநர் பயணம் தொடர்பாக முன்கூட்டியே தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் காவல்துறை தகுந்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ளவில்லை. எனவே இந்த பிரச்சனையில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளதாகவும், தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத போது சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. ஆளுநருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது தமிழக காவல்துறைக்கு விழுந்த கரும்புள்ளி" என கடுமையாக குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications