தமிழகத்தில் இந்தியை திணித்தால் காங்கிரஸ் கதிதான்... பாஜகவுக்கு அதிமுக எச்சரிக்கை!
சென்னை: இந்தி திணிப்பு விவகாரத்தில் நிதானத்தையும் கட்டுப்பாட்டையும் மத்திய பாஜக அரசு கடைபிடிக்க வேண்டும் என அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணியில் அதிமுக மட்டுமே ஒரு தொகுதியில் வென்றது. ஆனால் மத்தியில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்தது.
இதனால் அதிமுகவுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுகவில் அமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. இதனால் அதிமுகவுக்கான வாய்ப்பை பறித்துக் கொண்டது பாஜக.
இழுத்து மூடுங்கள்.. வெட்கம் கெட்டவர்கள்.. நள்ளிரவில் எச் ராஜா அலப்பறை!
இந்தி திணிப்பு- அரசு எதிர்ப்பு
அக்கட்சியின் இந்த நடவடிக்கையால் அதிமுகவினர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த நிலையில்தான் மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிக்க வேண்டும் என்கிற கஸ்தூரி ரங்கன் கமிட்டி பரிந்துரைகள் வெளியானது. இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்திய பாஜக அரசு மும்மொழிக் கொள்கையை திணிக்கக் கூடாது என தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேரு உறுதிமொழியை மீறினால்
இதனைத் தொடர்ந்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது அம்மாவில் இந்தி திணிப்புக்கு எதிராக "நாடும் மொழியும் நமக்கிரு கண்கள்" என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தி பேசாத மாநிலங்கள் அவர்கள் விரும்பும் வரை ஆங்கிலத்தையே தொடர்பு மற்றும் அலுவல் மொழியாக பின்பற்றலாம் என்னும் அன்றைய பாரத பிரதமர் நேருவின் வாக்குறுதி நிறம் மாறி போக, அன்னை தமிழுக்கு ஆபத்து என்று ஒட்டுமொத்த தமிழகம் கிளர்ந்தெழுந்தது. அதனால் உருவான மொழிப்போரில், எதிரிக்கு உன்னால் தரப்படும் மிக மோசமான தண்டனை உன்னையே நீ வருத்திக் கொள்வது அல்லது உன்னையே நீ அழித்துக் கொள்வது என்கிற புதியதோர் உயிராயுதத்தை தமிழகத்து இளைஞர்களும் மாணவர்களும் ஏந்தினர்.
மொழிப்போர் போராளிகள்
கீழப்பழுவூர் சின்னசாமி, கீரனூர் முத்து, விருகம்பாக்கம் அரங்கநாதன என்றெல்லாம் எண்ணில்லா தடந்தோள் வீரர்கள் செந்தணலில் தம்மை இட்டு செத்து மடிந்தனர். அந்த 1965 மொழிப்போர் ஒட்டுமொத்த காங்கிரசையே தமிழ்நாட்டில் புதைச் சேற்றில் தள்ளியது. இன்றுவரை எழுந்து கொள்ள முடியாத அளவுக்கு அரசியல் பேரழிவை அவர்களுக்குக் கொடுத்ததற்கு காரணம் இந்தியை கையில் எடுத்து அன்னை தமிழ் மீது அவர்கள் தொடுக்க அக்கிரம தாக்குதல்தான்.
திணித்தால் எதிர்ப்பு
அதன்பின் தேசத்தை ஆளவந்த அத்தனை அரசுகளும் அந்த அரசை உருவாக்கிய அரசியல் கட்சிகளும் கடந்த காலத்தை மனதில் கொண்டு அவசியமற்ற மொழித் திணிப்பை செய்திடாமல் செவ்வனெ தொடர்ந்த நிலையில், தேசிய கல்வித் திட்டங்கள் வாயிலாக மொழித் திணிப்புகள் சில தருணங்களில் முன்வைக்கப்பட்ட போது அவற்றுக்கு எதிராக பீறிட்டு எழுந்த கடும் எதிர்ப்பால் அத்தகைய முயற்சிகளும் கைவிட்டதே வரலாறு.
தேவை நிதானம்
ஆகவே நதி, இனம், மொழி உள்ளிட்ட உணர்ச்சிகளாலும் சுயமரியாதையலும் இனமானத்தாலும் கட்டி எழுப்பப்பட்ட விவகாரங்களில் நிதானத்தையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிப்பது ஒன்றே 'வேற்றுமையில் ஒற்றுமை' என்னும் விளைநிலத்தில் விருட்சமாக எழுந்து நிற்கும் பாரதம் என்கிற அறிவார்ந்த போதி மரத்துக்கு நல்லது.
இதனை ஆட்சியில் இருப்போரும் ஆளப்படுகிற மக்களும் சேர்ந்தே பின்பற்றுவதுதான் பூரண ஜனநாயகத்துக்கு புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் தரும். இதனை புரிந்து கொள்வதே உத்தமம்.