தொடர் விமர்சனத்துக்கு நடுவே.. செந்தில் பாலாஜி மீது திடீர் பாசம்.. அண்ணாமலையை கவனிச்சீங்களா! ஆஹா
சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட உள்ள நிலையில், தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் அண்ணாமலை திடீரென்று செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக பாசத்தை வெளிப்படுத்திய சம்பவம் நடந்தது.
தமிழ்நாட்டில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி . சமீபத்தில் இவரது சகோதரர் அசோக், உறவினர்கள் நண்பர்கள், நெருக்கமான ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது.

இதையடுத்து நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் வீடுகளில் சோதனை நடத்தினர். மேலும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.
செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகத்தில் 17 மணிநேரம் சோதனை நடந்து முடிந்தது. இதையடுத்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது நெஞ்சுவலி எனக்கூறி அவர் துடித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜியை சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதற்கிடையே தான் சென்னையில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். பொதுவாக செந்தில் பாலாஜி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அண்ணாமலை இன்றும் அவரை விமர்சனம் செய்தார். அதேவேளையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாகவும் அண்ணாமலை பேசினார். இதுபற்றி அண்ணாமலை கூறியதாவது:

யாராக இருந்தாலும் கூட உடல்நலம் என்பது ரொம்ப முக்கியம். இதயம், நுரையீரல் என அனைத்து உறுப்புகளும் முக்கியம். முக்கிய உடல் உறுப்புகளில் உள்ள பிரச்சனைகளை மனிதாபிமான அடிப்படையில் தான் பார்க்க வேண்டும்'' என செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக அண்ணாமலை பேசினார். இருப்பினும் அடுத்ததாக அண்ணாமலை, செந்தில் பாலாஜியை தாக்கி பேசினார்.
இதுதொடர்பாக அண்ணாமலை, ‛‛நான் நிறைய பேரிடம் காலையில் கூறினேன். செந்தில் பாலாஜி மட்டுமின்றி எக்ஸ், ஒய், இசட் என யாராக இருந்தாலும் கூட அவர்களை குற்றவாளியாக தான் பார்க்க வேண்டும். ஒரு மனிதனுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் டாக்டர் சான்று அளிக்கின்றனர். நடவடிக்கை எடுக்கின்றனர் என்றால் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதேவேளையில் இன்னும் கொஞ்சம் ஆழமாக இந்த வழக்கை எடுத்து செல்ல வேண்டும்.
செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். பொதுமக்களும் அறிந்து வைத்து இருந்தனர். பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு வந்தனர். இருப்பினும் தற்போது முட்டுக்கட்டைகளை உடைத்து அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது'' என அமலாக்கத்துறைக்கு ஆதரவாகவும், செந்தில் பாலாஜிக்கு எதிராகவும் அண்ணாமலை பேசினார்.












Click it and Unblock the Notifications