விவசாயம் மிக பெரியளவில் பாதிக்கும்! மேட்டூர் அணையை கூடுதலாக 15 நாட்களுக்கு திறங்கள்! டிடிவி தினகரன்
மேட்டூர் அணையைக் கூடுதலாக 15 நாட்கள் திறக்க அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக 15 நாட்கள் மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12ஆம் தேதி நீர் திறக்கப்படும். அணையில் இருக்கும் நீர் அளவை பொறுத்து ஜூன் 12-க்கு முன்பே கூட சில சமயம் நீர் திறக்கப்படும்.
அதன்படி கடந்தாண்டு பருவ மழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் வழக்கத்திற்கு முன்பாகவே அதிகரித்தது. இதனால் நீர் முன்கூட்டியே திறந்துவிடப்பட்டது.
மேட்டூர் அணை
அதாவது ஜூன் 12ஆம் தேதிக்குப் பதில் மே 24ஆம் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது. மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீர் மூலம் சேலம், நாமக்கல் ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இருக்கும் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். இதனிடையே டெல்டா பாசனத்துக்காகத் திறக்கப்பட்ட தண்ணீர் ஜனவரி மாதம் 28ஆம் தேதி மாலையுடன் நிறுத்தப்படுவது வழக்கம்.
நிறுத்தம்
அதன்படி இந்தாண்டும் நேற்று மாலை 6 மணிக்கு டெல்டா பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பது மேட்டூர் அணையில் நிறுத்தப்பட்டது. இந்தாண்டு ஆண்டு டெல்டா பாசனத்திற்காக 204 டி.எம்.சி. நீர் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தஞ்சை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் இன்னும் சில நாட்கள் கூடுதலாக நீர் திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 லட்சம் ஏக்கர் பயிர்கள்
அரசு கூடுதலாக நீர் திறக்கவில்லை என்றால் 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மழை வெள்ள பாதிப்புகளால் பயிர் இன்னும் அறுவடைக்கு எட்டவில்லை என்றும் இதனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக் கூடுதலாக 15 நாட்கள் மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
டிடிவி தினகரன்
இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து மே 24ஆம் நாள் பாசனத்திற்காக நீர் திறந்தபொழுதும், மழை வெள்ள பாதிப்புகளால் சம்பா சாகுபடி ஒரு மாத காலம் தாமதமாக தொடங்கியதால் பயிர்கள் இன்னும் அறுவடைக்கு தயார் நிலையை எட்டவில்லை.
15 நாட்களுக்கு
இந்நிலையில் வழக்கமான நிகழ்வாக ஜனவரி 28ஆம் தேதியே தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டிருப்பது, டெல்டா விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது சம்பா சாகுபடி நிறைவடையாத நிலையில், சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாதிப்புக்குள்ளாகும் என்பதால், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மேலும் 15 நாட்களுக்குத் தண்ணீரைத் திறக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.