ஸ்கெட்ச் ஓபிஎஸ்க்கு இல்லை! டிடிவிக்கே ஷாக் கொடுத்த சிவி சண்முகம்! அடுத்தடுத்து தாவும் அமமுக ’தலைகள்’
சென்னை : அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் அவ்வப்போது தலைகாட்டி பேசி வந்த டிடிவி தினகரனுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார் விழுப்புரம் மாவட்ட முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம். என்ன நடந்தது? அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்பது குறித்து விரிவான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர் விழுப்புரம் அதிமுகவினர்.
அதிமுகவில் என்ன நடந்தாலும் இறுதிவரை போராடி தனக்கான இடத்தை பெற்றே தீருவேன் என எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருக்கிறார். பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை அதிமுகவில் சேர்க்க மறுத்து வருகிறார்.
அதே நேரத்தில் பாஜக தரப்புடன் இணக்கம் காட்டி வரும் டிடிவி தினகரன் மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார். இதன் மூலம் மீண்டும் அதிமுக கட்சிக்குள்ளும் செல்வாக்கு பெறலாம் என அவர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன் அதிமுகவுக்குள் அல்லது பாஜக கூட்டணியில் வந்தால் அதிமுகவில் நேரடியாக ஆதிக்கம் செலுத்துவார். இதன் காரணமாக தங்களது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உணர்ந்துள்ளது. அவர் வந்தால் சசிகலா வருவார், சசிகலா வந்தால் ஓ.பன்னீர்செல்வம் வருவார். இதனால் அதிமுக தனது கையை விட்டு போய் விடுமோ என அஞ்சும் எடப்பாடி பழனிசாமி அதெல்லாம் முடியாது என திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

அதிர்ச்சி தகவல்
இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று இன்று சென்றிருக்கிறது. விழுப்புரம் அமமுக வடக்கு மாவட்ட கழக செயலாளரும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி மண்டல பொறுப்பாளருமான பாலசுந்தரம், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அய்யனார் ஆகியோர் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமானசி.வி சண்முகம் தலைமையில் திண்டிவனம் மொட்டையன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

ஆதரவாளர்கள் தாவல்
இதுவரையில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது ஆதரவாளர்கள் மாறி மாறி அணி தாவி வந்த நிலையில் திடீர் திருப்பமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பயணித்த டிடிவி தினகரனின் ஆதரவாளர்களை வளர்க்கும் முயற்சியில் எடப்பாடி தரப்பு ஈடுபட்டிருப்பது டிடிவி தினகரனை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. இது மட்டுமல்லாமல் தங்கள் மாவட்டங்களில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர்களை தங்கள் தரப்புக்கு இழுக்கும் முயற்சியில் எடப்பாடி தரப்பு ஈடுபட்டுள்ளதாகவும் இதற்காக பல முன்னாள் அமைச்சர்கள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

என்ன திட்டம்?
தற்போது சிவி சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ள இருவரும் நாளை முறைப்படி எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் மீண்டும் இணைய இருக்கின்றனர். இந்த தகவலால் தினகரன் தரப்பு வட்டாரம் கடும் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் வரும் நாட்களில் மேலும் பல மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி முகாமுக்கு காவலாம் என கூறப்படுகிறது. மேலும் அதிமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் மாவட்ட செயலாளர்கள் யார் யார் என்பது குறித்து கண்காணிக்கவும் டிடிவி தினகரன் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications