சென்னை நெற்குன்றத்தில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம்.. அதிமுக கவுன்சிலர் ஆவேச பேட்டி
சென்னை: சென்னை நெற்குன்றம் பகுதியில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் பல ஆண்டுகளாக குத்தகைதாரர்கள் வசம் இருக்கிறது. அந்த நிலத்தை நிச்சயம் மீட்பேன் என சென்னை மாநகராட்சியின் 145வது வார்டு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் ஆவேசமாக தெரிவித்துள்ளார். 'நெற்குன்றம் மண் நெற்குன்றம் மக்களுக்கே' என்ற தலைப்பில் நேற்று நடந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையின் புறநகர் பகுதிகளான பரங்கிமலை தொடங்கி பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் பல்வேறு அரசு நிலங்கள் ஒரு காலத்தில் குத்தகைகக்காக தனியாருக்கு கொடுக்கப்பட்டன. அப்படிப்பட்ட நிலங்களை அரசு படிப்படியாக மீட்டு வருகிறது. அண்மையில் கூட கிண்டி குதிரை பந்தய மைதான நிலத்திற்கு அரசு சீல் வைத்தது.

தென்சென்னை பகுதியில் மட்டுமல்ல, வில்லிவாக்கம் தொடங்கி மாதவரம், பெரம்பூர், கொரட்டூர், அம்பத்தூர், புழல் , நெற்குன்றனம், செங்குன்றம் உள்பட வடசென்னையின் பல்வேறு அரசு நிலங்களை அரசு படிப்படியாக மீட்டு வருகிறது. இதில் குத்தகை நிலம் என்பதை தாண்டி, ஆக்கிரமிப்பு நிலங்கள் பலவற்றை அரசு மீட்டு வருகிறது. 2015 வெள்ளத்திற்கு பிறகு சென்னையில் நிலங்களை ஆக்கிரமிப்பது சாத்தியமில்லாத ஒன்று என்கிற அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. இந்நிலையில் பழைய அரசு நிலங்கள் இன்னமும் படிப்படியாக மீட்கப்பட்டு வருகிறது..
இந்நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியான நெற்குன்றம் 145வது வார்டில் வருகிறது. இங்குள்ள என்.டி.பட்டேல் சாலையில் ரூபாய் 100 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 14 செண்ட் அரசு நிலம் இருக்கிறது. இந்த நிலதை மீட்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அதிமுக நேற்று நடத்தியது. இந்த போரட்டம் 145 வது வார்டு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் தலைமையில் 'நெற்குன்றம் மண் நெற்குன்றம் மக்களுக்கே' என்ற தலைப்பில் நடந்தது.
இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பலர் பங்கேற்றனர். போராட்டத்தின்போது தனியார் வசமுள்ள அந்த இடத்தை மீட்டு அங்கு அரசு சார்பில் சமூக நலக்கூடம் அமைக்க வேண்டும், மகளிர் சுய தொழில் கட்டமும் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். போராட்டம் நடத்துவது குறித்து தகவல் அறிந்த வந்த செங்குன்றம் போலீசார், இந்த இடத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் போலீசாரின் வேண்டுகோளின் படி கைவிடப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கவுன்சிலர் சத்யநாதன் கூறும் போது "1962ஆம் ஆண்டு நெற்குன்றம் பகுதியில் உள்ள 1.14 ஏக்கர் அரசு நிலத்தை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு லீசுக்கு தந்தார்கள். அந்த நிலம் அப்போது ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஆசிரமம் கட்டுவதற்காக வழங்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக எந்தவித கட்டிடமும் கட்டப்படவில்லை. அதேநேரம் ஒருவேளை கட்டப்பட்டிருந்தால் குத்தகை முடிந்த பின்னர் இடத்தை மீட்கும் போது கட்டப்பட்ட கட்டிடத்திற்காக இழப்பீடு கொடுத்து இடத்தை மீட்டுக் கொள்ளலாம் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான தகவல்களுடன் கடந்த 2021ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சராக இருந்த பெஞ்சமினும், நானும் தெரிவித்தோம். அதன் பிறகு சட்டப்படி இடத்தை மீட்க முயன்ற போது, மீண்டும் அந்த இடம் குத்தகைதாரர்கள் வசம் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வாதாட வேண்டிய வட்டாட்சியர் உள்ளிட்ட எந்த அதிகாரிகளும் உரிய முறையில் நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தவில்லை. 100 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை மீட்டால் அங்கு மக்களுக்கு ஒரு சமுதாய நலக்கூடமோ அல்லது மகளிர் தொழில் செய்வதற்கு ஒரு கட்டிடமோ கட்டலாம். அந்த நோக்கத்தில் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினோம்.
ஆனால் எங்களிடம் போலீசார் சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை,, ராஜரத்தினம் அரங்கம் வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த போராட்டத்தை கைவிட்டிருக்கிறோம். நெற்குன்றம் மக்களின் இந்த நிலத்தை நெற்குன்ற மக்களுக்காக நான் நிச்சயம் மீட்பேன்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications