"ஆன்லைன் சூதாட்ட தடை" 88 நாள் ஆகுது.. 41 உயிர் போயாச்சு.. ஆளுநர் மனம் இரங்கலையா?- அன்புமணி கேள்வி
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து பொறியாளர் பலியாகிவிட்டார். இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தில் 41 பேர் பலியாகியும் ஆளுநரின் மனம் இரங்கவில்லையா? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3.5 லட்சம் பணத்தை இழந்த பாலன் என்ற பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் கடந்த 03.08.2021-இல் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 41 ஆவது தற்கொலை இதுவாகும்.
இன்னும் எத்தனை பேர்? ஆன்லைன் சூதாட்டம்.. ரூ.3 லட்சத்தை இழந்த பட்டதாரி இளைஞர் தற்கொலை!
ஆன்லைன் சூதாட்டம்
கடந்த 3 நாட்களில் இரு இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை கொண்டது பெரும் சோகமாகும்! தந்தைக்கு அனுப்ப வேண்டிய ரூ.50 ஆயிரத்தை ஆன்லைனில் சூதாடி இழந்தது தான் பாலனின் தற்கொலைக்கு காரணம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களால் அதிலிருந்து மீள முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது.
41 உயிர்கள் பலி
ஆன்லைன் சூதாட்டத் தடை மட்டுமே இளைஞர்களை மீட்கும்; காக்கும்! 41 உயிர்கள் பலியான பிறகும், 88 நாட்களாக காத்துக் கிடக்கும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது கண்டிக்கத்தக்கது. இனியும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் ஒப்புதல்
ஆன்லைன் சூதாட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது மட்டுமில்லை, நீட் தேர்வு விலக்கு மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களையும் ஆளுநர் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் என திமுக, கூட்டணி கட்சிகள், பாமக உள்ளிட்டவற்றின் குற்றச்சாட்டாக உள்ளது.
இன்னுயிர்
இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தங்கள் இன்னுயிரை இழந்து வருகிறார்கள். இதனால் அவர்களுடைய குடும்பத்தினர் ஆதரவின்றி பொருளாதார ரீதியில் தவித்து வருகிறார்கள். இதனால்தான் இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் அரசுக்கு வலியுறுத்தப்பட்டன. அதன்பேரில் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அதை கிடப்பில் போட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.