"பர்னிச்சரை" உடைத்த அன்புமணி.. மாம்பழத்தை "கீழே வீசிய" ஜெயக்குமார்! சல்லி சல்லியாக போன எடப்பாடி கனவு
சென்னை: அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் என்று தொண்டர்கள் எதிர்ப்பார்த்து வந்த நிலையில்தான் அந்த கூட்டணி கனவில் பாமக மண் அள்ளி போட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பாமக - அதிமுக மீண்டும் கூட்டணி வைப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மாறாக இரண்டு கட்சிகளுக்கும் இருக்கும் விரிசல் மேலும் அதிகரித்து உள்ளது.
கடந்த ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு முன்பாக அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது. அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறிய போது, தேர்தல் நேரத்தில் நிர்வாகிகளை எடப்பாடி "கண்ட்ரோல்" செய்யவில்லை என்று ராமதாஸ் வெளிப்படையாக குற்றஞ்சாட்டி இருந்தார்.
நன்றி மறந்த அன்புமணி.. அதிமுக இல்லையென்றால் பாமக இல்லை! சீண்டினால் அவ்ளோதான் - எச்சரித்த ஜெயக்குமார்
குற்றச்சாட்டு
அதிமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் வைத்து இருந்தார். கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை. அதிமுகவிற்கு ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை. இந்த நிலையில்தான் எங்கே திமுகவுடன் பாமக நெருங்கி வருகிறதோ என்று கேள்வி எழுந்துள்ளது. ஆளும் திமுக அரசை பாமக பெரிதாக விமர்சனம் செய்வதே இல்லை. திமுகவின் சில திட்டங்களுக்கு அவ்வப்போது பாமக பாராட்டு அறிக்கை கூட வெளியிட்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது பெரிய அளவில் கவனம் பெற்றது. அதிமுகவை விமர்சனம் செய்து அன்புமணி ராமதாஸ் பேசினார்.
என்ன சொன்னார்?
அதில், அதிமுக இப்போது 5 பாகங்களாக உடைந்துவிட்டது. பலரும் இங்கே சத்தம்தான் போட்டு வருகிறார்கள். பாமகதான் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. பாமக ஒரு அறிக்கை விட்டால் போதும் முதல்வர் ஸ்டாலின் அதை நிறைவேற்றி விடுகிறார். அந்த அளவிற்கு பாமகவின் குரலுக்கு மதிப்பு இருக்கிறது. சிலர் தினமும் செய்தியாளர்களை சந்திக்கிறார்கள், பேட்டி கொடுக்கிறார்கள், அப்படி ஏன் செய்யவில்லை என்று என்னிடம் கேட்கிறார்கள். சிலர் இப்படி விளம்பரத்திற்காக செய்வார்கள். விளம்பரத்திற்காக வாட்ச் காட்டுவார்கள். இதெல்லாம் நமக்கு தேவை இல்லை, மக்கள் நம்மை நம்புகிறார்கள். நாம்தான் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம், என்று அன்புமணி ராமதாஸ் அண்ணாமலையை விமர்சனம் செய்து, திமுகவை பாராட்டுவது போல பேசி இருந்தார்.
பதிலடி
அதிமுகவை அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்து இருந்த நிலையில், இதற்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அதில், பாமக ஏறி வந்த ஏணி அதிமுக. அதிமுக இல்லை என்றால் பாமக இல்லை. பாமக நன்றி மறக்க கூடாது. பாமகவை ஏற்றி விட்டது ஜெயலலிதா. அன்புமணி மீது எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனாலும் அவரின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். 1991 ஆம் ஆண்டு பாமக சட்டமன்றத்தில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. பாமகவிற்கு அங்கீகாரம் கொடுக்க காரணமே ஜெயலலிதாதான் என்பதை மறக்க வேண்டாம். பாமக 1998 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து 5 சீட்டு கொடுத்தது.
அதிமுக தயவு
இதனால் அதிமுக தயவில் நான்கு இடத்தில் வருகிறார்கள். அதுவும் கூட அதிமுகவிற்கு இருந்த வாக்கு வங்கி, அதிமுக கூட்டணியின் பலம் காரணமாக வந்தவாக்குகள். அந்த நான்கு இடத்தில் ஜெயித்ததால் மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அன்புமணி மற்றும் பாமகவினர் மறக்க கூடாது என்று ஜெயக்குமார் பேசி இருக்கிறார். ஒரு பக்கம் அதிமுக பர்னிச்சரை அன்புமணி உடைக்க.. இன்னொரு பக்கம் பாமக மாம்பழத்தை ஜெயக்குமார் ஜூஸ் போட்டு பிழிந்து இருக்கிறார். இதனால் அதிமுக - பாமக கூட்டணி 2024ல் உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் என்று தொண்டர்கள் எதிர்ப்பார்த்து வந்த நிலையில்தான் அந்த கூட்டணி கனவில் பாமக மண் அள்ளி போட்டுள்ளது.
கூட்டணி
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்கி வைத்தது என்னவோ எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். 2024 லோக்சபா தேர்தலில் மெகா கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதுதான் இந்த விவாதம் நடக்க காரணம். நாமக்கல் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணியாக இது இருக்கும். அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பவர்களின் கனவு பலிக்காது. பல காலமாக இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள். அதுதான் இப்போதும் நடக்கும்.
முடியாது
தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை நிலைநிறுத்துவோம். எங்கள் மீது வழக்குகளை போட்டு எங்களை முடக்க முடியாது. அதற்கு நாங்கள் விட மாட்டோம், என்று கூறினார். இந்த நிலையில்தான் எடப்பாடி யாருடன் மெகா கூட்டணி வைப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் பாமக கட்சி மோதலில் ஈடுபட்டு வருகிறது. எடப்பாடி - பாஜக உறவு அவ்வளவு சுமுகமாக இல்லை. அமமுகவை சேர்க்க எடப்பாடி விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியை துறக்க வாய்ப்பு மிக குறைவு. கமல்ஹாசனும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க இருக்கிறார். அப்படி இருக்கும் போது எடப்பாடியின் அதிமுகவுடன் யார் கூட்டணி வைப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.