‛வன்னியர் ஓட்டுக்கு குறி’.. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக அன்புமணி பிரசாரம்.. தேதி ரெடி
சென்னை: ஆந்திரா லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் ஒன்றாக வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்காக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆந்திராவில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். இங்கு லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஒரே நாளில் நடைபெற உள்ளது. வரும் 13ம் தேதி ஆந்திராவில் லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் என்பது நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்ட்டுகளுடன் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது. அதேபோல் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
வரும் 13ம் தேதி லோக்சபா, சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆந்திராவில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. தற்போது தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. வரும் 11ம் தேதியுடன் பிரசாரம் முடிவடைய உள்ளதால் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட தேர்தலில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தான் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். தேர்தல் பிரசாரம் செய்ய அன்புமணி ராமதாசுக்கு, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று தான் அன்புமணி ராமதாஸ் ஆந்திராவில் பிரசாரம் செய்ய இருக்கிறார்.
அதாவது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தற்போது குப்பம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவர் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடும் நிலையில் தனக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும்படி அன்புமணி ராமதாசுக்கு அவர் அழைப்பு விடுத்தார். இதற்கு முக்கிய காரணம் தொகுதியில் உள்ள வன்னியர் ஓட்டுகளை அறுவடை செய்வதே ஆகும்.
அதாவது குப்பம் தொகுதி என்று தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில் அமைந்துள்ளது. குப்பம் தொகுதியிலும் தமிழர்கள் அதிகமாக இருக்கின்றனர். குறிப்பாக வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்களின் ஓட்டுகளை பெறும் முனைப்பில் தான் அன்புமணி ராமதாஸை, சந்திரபாபு நாயுடு பிரசாரத்துக்கு அழைத்துள்ளார்.
இதற்கு அன்புமணி ராமதாஸ் ஓகே கூறியுள்ள நிலையில் வரும் 11ம் தேதி அவர் சந்திரபாபு நாயுடுவின் அழைப்பை ஏற்று தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் பாமக உள்ளது. அதேபோல் ஆந்திராவில் பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications