"திமுக தோற்கணும்னு ராகுல் காந்தியே ஆசைப்படுறாரு".. கொளுத்திப் போடும் அண்ணாமலை!
கோவை: தமிழ்நாட்டில் திமுக தோற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நினைக்கிறார் என்றும், தேர்தல் முடிவு ஏற்கனவே தெரிந்துவிட்டதால் ராகுல் காந்தி இங்கு வரவில்லை என்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராமை ஆதரித்து ஆவாரம்பாளையத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, "ராகுல் காந்தி புதுச்சேரியில் பிரசாரம் செய்துவிட்டு தமிழகத்துக்கு வரவில்லை. கேரளாவில் பிரசாரம் முடித்துவிட்டு கோவை விமான நிலையம் வந்தும் இங்கு தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை.

விமான நிலையம் அமைந்துள்ள கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்தான் போட்டியிடுகிறார். அவருக்கு ஏன் பிரச்சாரம் செய்யவில்லை? ஏனென்றால், தமிழ்நாட்டில் திமுக தோற்க வேண்டும் என்பதுதான் ராகுல் காந்தியின் விருப்பம்" என்று தெரிவித்தார்.
மேலும், "தமிழகத்திற்கு ஒரு கட்சி சுத்தமாக ஆகவே ஆகாது என்றால் அது காங்கிரஸ் கட்சி தான். அதைப்போல தமிழகத்தில் ஒரு கட்சி இருக்கவே இருக்கக்கூடாது என்றால் அது திமுக தான். இவர்கள் இருவரும் சேர்ந்து கூட்டணி வைத்திருக்கின்றார்கள். அந்த கூட்டணி ஒரு ஆமை புகுந்த வீடு போல தான். கடந்த 12 ஆண்டுகளாக தேசிய அளவில் காங்கிரஸ் ஆட்சி இல்லை. ஏப்ரல் மாதத்துடன் தமிழகத்தில் திமுக ஆட்சி முடிவிற்கு வரவுள்ளது.
திமுக காங்கிரஸ் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. இரு கட்சிகளுக்கும் இந்த கூட்டணியில் உண்மையான விருப்பம் இல்லை. இருவருக்கும் தோல்வி பயம் இருக்கிறது. தேர்தல் முடிவு ஏற்கனவே தெரிந்துவிட்டதால் ராகுல் காந்தி இங்கு வரவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அண்ணாமலை, "கொங்கு மண்டலத்தில் உள்ள 21 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வெல்லும். திமுக காங்கிரஸ் கூட்டணியில் ஒற்றுமை இல்லை. இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்க்கின்றனர். இந்தக் கூட்டணி வெற்றி பெறாது. திமுக காங்கிரஸ் கூட்டணியின் உள் பதற்றம் வெளிப்படையாகத் தெரிகிறது" எனக் கூறியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தில் உள்ள நிலையில், அண்ணாமலையின் இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகை தராதது குறித்த விமர்சனங்கள் ஏற்கனவே எழுந்துள்ள நிலையில், அண்ணாமலையின் பேச்சு அந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications