அமெரிக்க அதிபர் ஆவதற்கு முயற்சி செய்கிறார் அண்ணாமலை.. சீரியஸாக பதில் சொன்ன செல்வப்பெருந்தகை!
சென்னை: அமெரிக்க அதிபர் ஆவதற்கு அண்ணாமலை முயற்சி செய்கிறார் எனக் கூறியுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை.
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் நீடித்து வருகிறது. இருவரும் மாறி மாறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி திமுகவின் அடிமை என்று அண்ணாமலை நேற்று விமர்சித்திருந்தார். மேலும் எமர்ஜென்சிக்கு பிறகு இந்திரா காந்தி குடும்பத்தினர் வெளிநாடுக்கு தப்பிச் சென்றதாகவும், காங்கிரஸின் வரலாறு 4 கட்சி தாவி வந்த செல்வப்பெருந்தகைக்கு தெரியாது என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் செல்வபெருந்தகை. அப்போது அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
செல்வப்பெருந்தகை பேசுகையில், "ஒரு வட்டச் செயலாளராக இருப்பதற்கு கூட அண்ணாமலை தகுதி இல்லாதவர். அவரை எப்படி தமிழ்நாடு பாஜக தலைவராக நியமித்தார்கள் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் தொடர்ந்து மக்களால் ஒரு கட்சி புறக்கணிக்கப்பட்டு படுதோல்வி அடைந்து வருகிறது என்றால் அது பாஜக தான்.
தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியலையும், அவதூறுகளையும் பாஜக பரப்பி வருகிறது. நாடு முழுவதும் அக்கட்சிக்கு மக்கள் மிகப்பெரும் பாடத்தை புகட்டி உள்ளனர். கொடுத்துள்ளார்கள். இதனை புரிந்துகொண்டு அவர்களின் அநாகரீக அரசியலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இந்திரா காந்தி பற்றியும், காங்கிரஸ் அரசியலை பற்றியும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருக்கு தெரியாது என்று அண்ணாமலை சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் வரலாறு குறித்து பேச நான் தயாராக இருக்கிறேன். ஆனால் இந்து மகா சபை, ஜன சங்கம் தொடங்கி பாஜக வர பேசுவதற்கு அண்ணாமலை தயாராக இருக்கிறாரா?
தமிழின விரோதப் போக்குடன் கன்னடிகா மனநிலையில் தான் அண்ணாமலை தற்போதும் இருக்கிறார். அவர், "தமிழனாக இருந்தாலும், காவிரி பிரச்சனையில் கன்னட மக்களுக்கு தான் உதவி செய்வேன்" என்று கூறியுள்ளார். இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. இதை வெளியிட்டால் அரசியலில் இருந்து அவர் வெளியேறி விடுவாரா?
பாஜக எங்களை தொட ஆரம்பித்தால், சிருங்கேரி மட ரகசியம், அங்கு யார் இருந்தார்? யாரால் அண்ணாமலை உருவாக்கப்பட்டார்? என்பது குறித்து பேசுவோம். காங்கிரஸை திமுகவின் அடிமைக் கட்சி என்கிறார். இந்த வார்த்தை சர்வாதிகாரியிடம் இருந்து எஜமானனிடமிருந்து மட்டும் தான் வரும். "நான் யாருக்கும் அடிமையில்லை. யாரும் எனக்கு அடிமையில்லை" என்று சொன்ன அம்பேத்கரை அவர் படித்துள்ளாரா?
தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக நான் பாடுபடுவேன். ஆனால் தன் கட்சி வேட்பாளர் தோற்க வேண்டும் என்பதற்காகவே பாடுபடுபவர் அண்ணாமலை என்பது அந்தக் கட்சிக்காரர்களுக்கே தெரியும்." என விளாசி உள்ளார் செல்வப்பெருந்தகை.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் செப்டம்பர் மாதம் லண்டன் பயணம் மேற்கொள்ள இருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, "அமெரிக்க அதிபர் ஆவதற்கு அண்ணாமலை முயற்சி செய்கிறார், வாழ்த்துகள்" என கிண்டலாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications