புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? நயினார் நாகேந்திரன் சொந்த ஊரில் Fans Club நடத்திய திடீர் ஆலோசனை!
நெல்லை: நெல்லையில் இன்று நடந்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நற்பணி மன்றக் கூட்டம், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை எழுப்பியுள்ளது. தேர்தல் பொறுப்பாளர் பதவியை அவர் மறுத்த நிலையில், ஒரு புதிய கட்சி தொடங்க இது முன்னோட்டமா என்ற விவாதம் கிளம்பியுள்ளது.
தமிழகத்தின் அரவக்குறிச்சியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. கர்நாடகா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
அரசியலில் சேர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, பாஜகவில் இணைந்தார்.

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. ஆனால் இந்த தேர்தலில் இந்த கூட்டணி தோல்வியை தழுவியது.
அண்ணாமலை பதவியேற்றது முதலே அதிமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். ஒரு ஆங்கில நாளிதழுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனால் அதிமுக கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டது. இதை ஜெயக்குமார் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்த போது, "அதிமுக இனி எந்த சூழலிலும் பாஜகவுடன் கூட்டணி அமைக்காது" என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என்ற பேச்சுகள் எழுந்தன. ஆனால் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்கவே இல்லை. நாள்தோறும் இப்போது கூட்டணி , அப்போது கூட்டணி என செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தது.
இதை திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இந்த கூட்டணியில் அதிமுக இணைய ஒரு கோரிக்கையை பாஜகவிடம் வைத்திருந்தது. அதாவது பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலையை நீக்கிவிட்டு வேறொருவரை நியமிக்க வேண்டும் என்பதுதான். அந்த நேரத்தில்தான் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பதவியேற்று 3 ஆண்டுகள் ஆனதால் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படம் என நீண்டகாலமாகப் எதிர்பார்த்து கிடைக்காததால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சோர்வடைந்தனர். அண்மையில் வழங்கப்பட்ட ஆறு மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர் பதவியை, "தந்தையின் உடல்நலனைக் கவனிக்க வேண்டும்" எனக் காரணம் காட்டி அண்ணாமலை நிராகரித்தார்.
அண்ணாமலை பதவி மறுத்த சில மணி நேரங்களிலேயே, ஆறு மாதங்களாகச் செயல்பாடின்றி இருந்த அண்ணாமலை நற்பணி மன்றம் புத்துயிர் பெற்றது. பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில், தமிழகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் இன்று ஆலோசித்தனர்.
அண்ணாமலை எந்த முடிவெடுத்தாலும் தோள் கொடுப்போம் என ஆதரவாளர்கள் தீர்மானம் இயற்றுகின்றனர். பாஜக தலைமை அவரைப் புறக்கணிப்பதாகக் கருதும் அவர்கள், தனிக்கட்சி தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் சொந்த ஊரான நெல்லையிலேயே அண்ணாமலை ஆதரவாளர்கள் ஒன்று திரண்டது, தமிழக பாஜகவில் நிலவும் பிளவைப் பகிரங்கப்படுத்தியுள்ளது.
அண்ணாமலை நற்பணி மன்றத்தின் இந்தக் கூட்டம், தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவாகுமா அல்லது பாஜக தலைமைக்கு அழுத்தம் கொடுக்கும் குழுவாக மட்டும் செயல்படுமா என்பதை அரசியல் விமர்சகர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications