நான் அறிவாளி இல்லை.. நீங்களும் அறிவாளி இல்லை.. அண்ணாமலை அறிக்கை.. இன்னமும் ஓயாத ஜிஎஸ்டி சண்டை!
சென்னை: முதல்வர் நிதி அமைச்சருக்கு அறிவுரை கூற வேண்டும். நான் அறிவாளி இல்லை, நீங்களும் அறிவாளி இல்லை, ஆனால் கூட்டாக குழுவாக சேர்ந்தால் அறிவாளிதான் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
லக்னோவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளவில்லை. மாறாக தனது நிதித் துறை செயலாளரிடம் அறிக்கையை கொடுத்து அனுப்பினார்.
இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதுகுறித்து கடந்த சில தினங்களாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வார்த்தை போர் ட்விட்டரில் மூண்டு வருகிறது.
திடீரென டிஜிபியை சந்தித்த திமுகவின் கார்த்திகேய சிவசேனாபதி.. என்ன காரணம்.. அவதூறு பரப்புபவர் யார்?
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
சிலர் கேட்கும் கேள்விகளையும் தான் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு வராததற்கு சொல்லும் காரணங்களாலும் நிதியமைச்சர் தனது நிதானத்தை இழந்து அவதூறாக பேசுவதும் அவர்களை பிளாக் செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ளாததற்கு துரோகம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியதற்கும் பிடிஆர் பதில் கேள்வி எழுப்பினார்.
தமிழக நிதியமைச்சர்
இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார், அதில் தமிழக நிதியமைச்சராக இருந்து கொண்டு அந்த பொறுப்புக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பெரியவர் சிறியவர் என பேதமில்லாமல் டிவிட்டரில் வசை பாடுவது அந்த பதவிக்கு அழகல்ல. முதல்முறையாக அமைச்சரானதால் தலைகால் புரியாமல் சித்தம் கலங்கி பேசுவது சரியல்ல.
பணிவும் வர வேண்டும்
பதவி வரும் போது பணிவும் வர வேண்டும், துணிவும் வர வேண்டும் என்ற எம்ஜிஆர் பாடல் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மிகவும் பொருந்துகிறது. கொஞ்சநஞ்சமிருந்த நாகரீகத்தை அமெரிக்காவில் விட்டுவிட்டு வந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். தனக்கு தான் எல்லாம் தெரியும் என நினைப்பவன் சுயமோகி. நானும் படித்தவன் தான், இரண்டு பட்டங்கள் பெற்றவன்தான். ஆனாலும் கர்வம் கொண்டதில்லை. நீங்கள் ஏன் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என கேள்வி எழுப்பினால், 2017ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி நானும் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என எதிர்கேள்வி எழுப்புகிறீர்கள். அன்றைய தினம் தமிழக நிதியமைச்சர் என்ற முறையில் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தேன் என தனது செய்திக் குறிப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர்
இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் ஏ.கே. ராஜன் கமிட்டி அறிக்கை கடும் முரண்பாடுகளை கொண்டுள்ளது. கல்வி வியாபார சந்தையாக இருந்ததை நீட் உடைத்துள்ளது. இதை ஏ.கே. ராஜன் கமிட்டி அறிக்கை பேசவில்லை.
மத்திய அரசு அனுமதி
இந்த வருடம் 150 மாணவர்களோடு எய்ம்ஸ் திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தும் , தமிழக அரசு திறக்க வேண்டாம் என முரண்டு பிடிக்கிறது ஏன்? தன்னை பெரிய பொருளாதார அறிஞர் என கூறிக் கொள்கிறார் தமிழக நிதியமைச்சர். மனம் மாறி நல்ல நிதியமைச்சராக வருவார் என நம்பிக்கை உள்ளது. நிதியமைச்சருக்கு முதல்வர் அறிவுரை கூற வேண்டும். நான் அறிவாளி இல்லை. நீங்களும் அறிவாளி இல்லை. ஆனால் கூட்டாக குழுவாக சேர்ந்தால் அறிவாளிதான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.