அமைச்சர் சேகர்பாபு ஆண்டவனுக்கு பதில் சொல்லியே ஆகணும்.. உண்டியல் பணத்தில் முறைகேடு.. அண்ணாமலை அட்டாக்
சென்னை: அமைச்சர் சேகர்பாபு, தனது ஒவ்வொரு தவறுக்கும், ஆண்டவனுக்கும், பொதுமக்களுக்கும் பதில் சொல்லத் தயாராக இருந்து கொள்ளட்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையை தமிழக பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறையே இருக்காது என்றும் சபதம் எடுத்தார் அண்ணாமலை. இந்நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை கடுமையாக விமர்சித்து உள்ளார் அண்ணாமலை. திருச்செந்தூரில் பக்தர்கள் அவதிப்பட்டது குறித்து புகார் தெரிவித்தபோது அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதிலை விமர்சித்து பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நேற்றைய தினம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாக, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பக்தர்களை, உணவு, தண்ணீர் இன்றி, அடைத்து வைத்திருக்கின்றார்கள். இது குறித்து பக்தர்கள் புகார் தெரிவித்தபோது, "திருப்பதி கோவிலில் மட்டும் 24 மணி நேரம் நிற்பான்" என்று ஒருமையில் அலட்சியமாகப் பதில் அளித்திருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.
திருப்பதி கோவிலில் பொதுமக்களுக்கு உணவு, தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட போதிய வசதிகள் செய்திருக்கிறார்கள். உங்களைப் போல, கோவில் உண்டியல் பணத்தை முறைகேடாகச் செலவழிப்பதில்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் நேர்மையான உழைப்பில் கிடைக்கும் பணத்தில் சிறு பகுதியை, கோவில்களுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறார்கள். உங்களைப் போல, கோவில் பிரசாதத்தில் கமிஷன் அடிப்பதில்லை.

கோபாலபுரம் குடும்பத்திற்கு நெருக்கம் என்ற ஆணவத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு. இதை விட அதிகார மமதையில் ஆடியவர்களுக்கு எல்லாம், காலம் பாடம் புகட்டியிருக்கிறது என்பதை அமைச்சருக்கு நினைவுபடுத்துகிறேன். காலம் மாறும். தனது ஒவ்வொரு தவறுக்கும், அமைச்சர் சேகர்பாபு, ஆண்டவனுக்கும், பொதுமக்களுக்கும் பதில் சொல்லத் தயாராக இருந்து கொள்ளட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications