'ஜுடோ கெபிராஜ்' மீது பாய்ந்தது புதிய வழக்கு.. வெளிநாட்டில் வாழும் இளம்பெண் இமெயில் பரபர புகார்
சென்னை: தற்காப்பு கலை பயிற்சி நடத்தி வந்த ஜுடோ பயிற்சியாளர் கெபிராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதாகி சிறையில் உள்ளார். இவர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் மேலும் ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கை பதிவு செய்துள்ளனர்.
சென்னை அண்ணாநகர் 11-ஆவது பிரதான சாலையில் தனியார் தற்காப்புப் பயிற்சி அளித்து வந்தவர் பயிற்சியாளர் கெபிராஜ். இவர் சென்னையில் உள்ள பள்ளிகளில் பகுதி நேரமாக தற்காப்பு கலையை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வந்திருக்கிறார்.
தன்னிடம் பயிற்சிக்கு வந்த மாணவி ஒருவருக்கு கெபிராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கெபிராஜ் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மாணவி புகார்
தற்காப்பு கலை போட்டிகளுக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அழைத்துச் சென்ற போது குறிப்பிட்ட மாணவியிடம் கெபிராஜ் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டாராம். குறிப்பாக நாமக்கல் மாவட்டத்திற்கு ஜூடோ போட்டிக்காக சென்றுவிட்டு திரும்பி காரில் வந்த போது அந்த மாணவியை பலவந்தப்படுத்தி கெபிராஜ் பாலியல் தொந்தரவு செய்ததாகவும், வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் புகார் எழுந்தது.
காவலில் விசாரணை
இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னாளில் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் இரண்டு நாட்கள் கெபிராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தார்கள். அத்துடன் கெபிராஜை வீட்டிற்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தி போலீசார், அங்கு லேப்டாப், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்து ஆய்வு செய்தார்கள்.
வழக்கு பதிவு
மேலும், சிபிசிஐடி போலீசார் கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று அறிவித்தனர். அத்துடன் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணையும் வெளியிட்டார்கள். புகார் கொடுப்பவர்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் கூறினார்கள். இந்நிலையில், மேலும் ஒரு பெண் ஒருவர் கெபிராஜ் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கெபிராஜ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மின்னஞ்சலில் புகார்
குறிப்பிட்ட பெண் மின்னஞ்சல் மூலம் சி.பி.சி.ஐ.டி.யிடம் அளித்த புகாரில், சில ஆண்டுகளுக்கு முன் பயிற்சிக்கு சென்றதாகவும் அப்போது கெபிராஜ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருக்கிறார். பாதிக்கப்பட்ட வெளிநாட்டில் இருப்பதால் வீடியோ மூலமாக வாக்குமூலம் பெற சிபிசிஐடி திட்டமிட்டு வருகிறார்கள்