சென்னையில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. எமனாக மாறிய ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம்
சென்னை: அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் பாதுகாப்புப் பணியில் இருக்கும் போதே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் சரவணன்குமார். 30 வயதான இவர், பாதுகாப்புப் பணியில் இருக்கும் பொழுதே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியைச் சேர்ந்த இவர், ஆவடி பூம்பொழில் நகரில் நேரு தெருவில் தங்கிக் காவல் துறையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஸ்வேதா என்பவருடன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் ஆனதாகக் கூறப்படுகிறது.
சென்னை அம்பத்தூரில் மத்திய அரசின் தொலைத் தொடர்பு சிறப்பு நிறுவனம் ஒன்றில் தொலைத்தொடர்பு இணையங்களைக் கண்காணிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. அந்த வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஆயுதப்படை காவலரான சரவணகுமார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது பணியில் இருக்கும் போதே, யாரும் எதிர்பார்க்காத வகையில் சரவணக்குமார் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனூப்பி உள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற அம்பத்தூர் காவல் துணை ஆணையர் மகேஷ், உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டில் அதிகமாகப் பணத்தை இழந்ததாலேயே ஆயுதப்படை காவலர், தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.