14வது முறையாக..? மேலும் 3 வாரம் அவகாசம் கோரி ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம்.. காரணம் என்ன?
சென்னை : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 3 வார காலம் அவகாசம் வேண்டும் என தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 13வது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆய்வு செய்து தாக்கல் செய்யவிருக்கும் அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியம் கூடுதல் அவகாசம் கோரியுள்ளது ஆறுமுகசாமி ஆணையம்.

ஜெயலலிதா மரணம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்து 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. முதற்கட்டமாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது. விசாரணையை தொடங்கிய ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை 2017 டிசம்பர் 24-ஆம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு, ஆணையத்தின் கால அவகாசத்தை தமிழக அரசு முதன்முதலாக நீட்டித்தது.

தொடர்ந்து நீட்டிப்பு
அதன்பின்னர் அடுத்தடுத்து ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வந்தது. கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டு வருவது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்துவதற்கு 2 ஆண்டுகள் இடைக்கால தடை விதித்தது. மருத்துவக் குழு அமைத்து விசாரணையை நடத்தவும் எய்ம்ஸ் இயக்குனரகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆறுமுகசாமி ஆணைய விசாரணை
அதன்படி, ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ 6 உறுப்பினர்களைக் கொண்ட மருத்துவர்கள் குழுவை எய்ம்ஸ் நியமித்தது. அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவு பெற்றதாக ஆறுமுகசாமி ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. விசாரணை ஆணையத்தின் அறிக்கை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

13வது முறையாக
ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கான கால அவகாசம் கடந்த ஜூன் மாதம் 13வது முறையாக நீட்டிக்கப்பட்டது. அதன்படி, கால அவகாசம் நாளையோடு (ஆகஸ்ட் 3ஆம் தேதி) நிறைவடைகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரணை குறித்த இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதாக ஆறுமுகசாமி ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. விசாரணையில் இடம்பெற்று இருக்கும் மருத்துவர்கள் வெளிநாடு சென்றுள்ளதால் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரணை தொடர்பான இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கடிதம் எழுதியது

மீண்டும் அவகாசம் கோரி கடிதம்
எய்ம்ஸ் அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரம் தான் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதால், அதற்குப் பிறகே ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையை தாக்கல் செய்ய முடியும். இதனால், மேலும் மூன்று வார காலம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதி அறிக்கை தாக்கல் செய்வது மேலும் தாமதமாவது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications