மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஸ்பெஷலாக சொல்லி கொடுங்க.. புறக்கணிக்காதீங்க.. இளம் யூடியூபர் கோரிக்கை
சென்னை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதில் ஏன் இத்தனை குளறுபடி என கேட்கிறார் இளம் எழுத்தாளர் அஷ்வின்.
இதுகுறித்து இளம் எழுத்தாளர் அஷ்வின் தனது யூடியூப் சேனல் டேக் 1 டேக் 2 டேக் 3-யில் கூறுகையில் ஒரு மாணவன் தனது முக்கால்வாசி வாழ்நாளை பள்ளியிலும், கல்லூரியிலும் கழிக்கிறான். அந்த பள்ளியும் கல்லூரியும் எப்படியெல்லாம் அவனுக்கு பாடத்தை சொல்லித் தர வேண்டும்? குறிப்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு எப்படியெல்லாம் பாடம் சொல்லி தர வேண்டும்?
தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
மற்ற மாணவர்களுக்கு 90 சதவீதம் முக்கியத்துவம் கொடுக்கும் போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 100 சதவீதம் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். சாதாரண மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது பத்தோடு 11 ஆக சொல்லிக் கொடுப்போம். ஆனால் இந்த மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 11 முறை பாடம் சொல்லித் தர வேண்டும்.
தோல்வி
மாணவர் ஒருவர் தனது பள்ளி பருவத்தில் தோல்வி அடைந்தால் அது மாணவனின் தோல்வி அல்ல, அவனை சார்ந்த ஆசிரியர்களின் தோல்வியாகும். அந்த பள்ளியை சார்ந்த தலைமை ஆசிரியரின் தோல்வி. 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் என்றால் அவனுக்கு இருக்கும் 5 பாடப்பிரிவுகளை எப்படி கையாள்வது என்பதை முன் கூட்டியே சொல்லித் தர வேண்டும்.
கண்காணித்தல்
பின்னர் அவன் எப்படி படிக்கிறான் என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் ஆசிரியர்கள் நம் பெற்றோரிடம் சொல்வது என்ன, உங்கள் மகன் படிப்பதே இல்லை, அரட்டை அடிக்கிறான் என்பார்கள். 9-ஆம் வகுப்பு முடித்தவுடன் 10 ஆம் வகுப்பை நான் எப்படி எதிர்கொண்டேன் என்பதை சொல்கிறேன்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு என தனியாக ஆசிரியரை போட்டு ஒவ்வொரு பாடத்தையும் ஒரு மணி நேரமாவது படித்துக் காட்ட வேண்டும். அந்த மாணவனுக்கு வரும் 5 பாடப்பிரிவுகளில் எந்த சப்ஜெக்ட்டில் அவன் வீக்காக இருக்கிறான் என்பதை பார்க்க வேண்டும். அந்த கடினமான பாடத்தில் அந்த மாணவனுக்கென பள்ளி நிர்வாகமே தனி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.
செஸ்
ஒரு தடவை சொல்லிக் கொடுத்தால் போதாது. இதைத்தான் நிறைய ஆசிரியர்கள் செய்கிறார்கள். கிரிக்கெட்டில் 11 பேர் இருக்கிறார்கள். அதில் 5 பேர் மட்டும் ஒழுங்காக விளையாடினால் அந்த டீம் வெற்றி பெறுமா? மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செஸ் விளையாட சொல்லிக் கொடுங்கள். இதன் மூலம் கணிதத்தில் நன்றாக செயல்படுவார்கள். ஆனால் எனக்கு செஸ்ஸையும் கணிதத்தையும் அரைகுறையாகவே சொல்லிக் கொடுத்தார்கள்.
ஆசிரியர்கள்
100 மார்க் எடுக்கும் மாணவர்களுக்கு மட்டும் சொல்லிக் கொடுத்தால் எங்களை மாதிரி சராசரி மாணவர்களுக்கு ஆசிரியர்களாகிய நீங்கள் சொல்லிக் கொடுக்கும் மதிப்புதான் என்ன? மாணவர்களில் 4 ரகம் உள்ளார்கள். ஒன்று தாமதமாக கற்பது, மாற்றுத்திறனாளிகள், கற்பூரம் மாதிரி பிடித்துக் கொள்பவர்கள், கடைசியாக எக்ஸ்ராடிர்னரி மாணவர்கள். இந்த 4 ரகங்களை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதைவைத்து எந்த மாணவர்களையும் எப்படி வேண்டுமானால் உருவாக்கலாம்.
பாடம் புரியவில்லை
இதற்கு சோம்பேறித்தனம் கொண்டு பெற்றோர்களிடம் மாணவர்கள் குறித்து புகார் கூறிவிடுகிறார்கள். வாராவாரம் பெற்றோரை ஆசிரியர்கள் பார்க்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் மாணவர்களின் கல்வித் திறன் குறித்து புகார் அளிக்காமல் பெற்றோரை மீட்டிங் என்ற பெயரில் வரவழைத்து அப்போதுதான் எல்லார் முன்னிலையிலும் சொல்வார்கள். யாராவது அந்த மாணவனிடம் உனக்கு எந்த பாடம் புரியவில்லை, உனக்கு எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என கேட்டிருக்கிறார்களா?
மாற்றுத்திறனாளிகள்
அந்த ஆசிரியர் மாற்றுத் திறனாளி மாணவரிடம் அரை மணி நேரம் பேசினால் போதும். கணிதம், வேதியியல் பாடங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். ஒரு மாணவரை கையாள்வதற்கு ஒரு ஆசிரியருக்கு பக்குவம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். எனக்கு 9ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வில் கணிதம் சொல்லிக் கொடுக்க அண்டைய வீட்டில் உள்ள ஒரு ஆசிரியரை அணுகினோம்.
கணித தேர்வு
அப்போது அவர் எல்லா கணக்கும் தனக்கு மறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டார். மறுநாள் எனக்கு கணித தேர்வு. நான் என்ன செய்வது, தமிழ், ஆங்கிலம், அறிவியல் சமூக அறிவியல் எல்லாம் நன்றாக படித்துவிட்டேன். ஒரே ஒரு தேர்வான கணிதத்தை எப்படி எதிர்கொள்வது என யோசித்தேன். அப்போதுதான் 15 மல்டிப்பிள் சாய்ஸ் கேள்விகள் வந்தது. 2 மதிப்பெண் கணக்குகளில் 2 கணக்குகளை போட்டேன்.
பயிற்சி
5 மார்க் கேள்வியில் ஒரு கணிதம் போட்டேன். காமென்ட்ரி, கிராஃப் போட்டேன். இதைத் தவிர நான் எதையும் போடவே இல்லை. இது என்னுடைய தவறே கிடையாது. முதலில் எனது ஆசிரியர்களின் தவறு. எனக்கு 4 மணிக்கு பள்ளி முடியும் போது என்னை வீட்டுக்கு அனுப்பாமல் 6 மணி வரை எனக்கு சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். பாஸ் செய்யும் அளவுக்காவது எனக்கு பயிற்சி கொடுத்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செய்முறை தேர்வு கிடையாது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். எனவே இந்த வீடியோவை நான் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே போட்டுள்ளேன். ஆசிரியர்கள் மாணவர்களை எளிதாக கைவிட்டு விடுகிறார்கள்.
வளர்த்துவிட்ட பள்ளி
ஆனால் மாணவர்களாகிய நாம் நம்மை வளர்த்துவிட்ட பள்ளியை விட்டுவிடக் கூடாது என்பதற்காக எல்லா பிரச்சினைகளையும் சமாளித்துவிட்டு இருக்கிறோம். திறமையான பள்ளிகள் நிறைய இருக்கின்றன. அந்த பள்ளிகளில் நாம் சேருவதற்கு நிறைய நேரம் ஆகாது. ஆனால் வளர்த்துவிட்ட பள்ளி என்பதால் அப்படி செய்வதில்லை. எனக்கு 5 நாட்களும் தேர்வு எழுத நியமிக்கப்பட்ட ஸ்கைரைப் மிகவும் நல்லவர். இவரிடமே நாம் படித்திருக்கலாமே என உணர்ந்தேன். அவரை என் வாழ்நாளில் நான் மறக்கவே மாட்டேன். மாணவர்கள்தான் சமுதாயத்தின் தூண் என அப்துல் கலாம் ஐயா சொன்னதை உண்மையாக்குங்கள் என்றார் அஷ்வின்.