உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பணி.. இனி டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு.. இதழியல் படிப்பு கட்டாயம்!
சென்னை: செய்தி மக்கள் தொடர்புத்துறையில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பணிகளில் இனி நேரடி நியமனத்துக்குப் பதிலாக டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக.வோ, அதிமுக.வோ எந்தக் கட்சியின் ஆட்சி அமைந்தாலும், அந்த ஆட்சியின் சாதனைகளை, திட்டங்களை மக்களிடம் கொண்டும் செல்லும் பணியை மேற்கொள்வது, செய்தி மக்கள் தொடர்புத் துறைதான். அந்தத் துறையில் கீழ்நிலை அதிகாரியாக இருப்பவர், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். அந்த பதவிக்கான நியமனங்கள் நேரடியாகவே நடைபெறும்.
பெரும்பாலும், எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்த கட்சியைச் சேர்ந்த குடும்ப வாரிசுகளுக்கு பதவி வழங்கப்படுவது வழக்கம். கடந்த காலங்களில் முதல்வரின் நேரடிப் பார்வைக்கு சென்று பணிநியமனங்கள் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கென்று தனியாக ஒரு அமைச்சர் இருந்தாலும் கூட, கட்சி நிர்வாகிகளின் வாரிசுகளுக்கான நேரடி நியமனம் என்பதால், கடந்த காலங்களில் நடைபெற்ற நியமனங்களின் போது, அப்போது முதல்வராக இருந்தவர்களே, இந்த நியமனங்களில் தனிக்கவனம் செலுத்தி இருக்கிறார்கள்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணி நியமனம் செய்யப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இனி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியும் டிஎன்பிஎஸ்சி மூலமே தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி மக்கள் தொடர்புத்துறையில் உள்ள உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தேர்வில் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது. உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் இதுவரை நேரடியாக நியமித்த நிலையில் இனி TNPSC மூலம் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியில் சேருவோர் இதழியல் படிப்பு படித்திருப்பதும் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிஏ, பிஎஸ்சி இதழியல், மாஸ் கம்யூனிகேசன், விசுவல் கம்யூனிகேசன், மக்கள் தகவல் தொடர்பு, விளம்பரம்,மல்டி மீடியா, மீடியா சயின்ஸ் படித்திருக்க வேண்டும். மக்கள் தொடர்பு அலுவலராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.பிஜி டிப்ளமோ இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் படித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் டைப்ரைட்டிங், தமிழ், ஆங்கிலம் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் படித்து விட்டு அதற்கேற்ப அரசு வேலை கிடைக்காமல் தவித்து வந்த பலருக்கும் அரசின் அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதே போல தமிழக சட்டசபையில் செய்தியாளர்கள் பணியும் டிஎன்பிஎஸ்சி மூலமே நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.