'வடிவேலு கிணற்றை காணோம் என சொன்னது போல்' திருச்செந்தூர் கோவிலில் மாடுகளை காணவில்லை..அண்ணாமலை
சென்னை: 'வடிவேலு கிணற்றை காணோம் என்று சொன்னது போல்' திருச்செந்தூர் கோவிலில் 5,309 மாடுகளை காணவில்லை. பக்தர்கள் மாட்டைகொடுத்த பதிவுகள் இருக்கிறது. ஆனால் யார் ஏலம் விட்டது? மாடுகளை திருடி திமுகவினருக்கு விற்று விட்டீர்களா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்தும், கோவில் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுவதை கண்டித்தும் பா.ஜ.க. சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
பா.ஜ.க.வின் ஆலய மற்றும் ஆன்மிக மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் எம்.நாச்சியப்பன் இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் எச்.ராஜா உள்பட கட்சியின் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த உண்ணா விரத போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே அறநிலையத் துறை நீக்கம்தான்.. அண்ணாமலை
உண்டியல் பணத்தை எடுத்து செலவு செய்கின்றனர்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் கிடைக்கும் வருமானம் 12 சதவீதம் தமிழக அரசுக்கு நிர்வாக செலவுக்காகவும், 4 சதவீதம் தணிக்கை செலவுக்காகவும் கொடுக்கப்படுகிறது. இருந்தாலும் பக்தர்கள் காணிக்கையாக போடும் உண்டியல் பணத்தை எடுத்து அதிகாரிகளின் உணவு செலவுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல, பல்வேறு பணிகளுக்கு அரசு செலவு செய்யாமல், கோவில் உண்டியல் பணத்தை எடுத்து செலவு செய்கின்றனர்.
5,309 மாடுகளை காணவில்லை
புராதன கோவில்களின் நகைகள் உருக்கப்படுகிறது. பூஜை புனஷ்காரங்கள் நிறுத்தப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடவுளுக்கு வேண்டி கொடுத்த பசுமாட்டை கொடுப்பார்கள். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த தணிக்கை அறிக்கையில் ஒரு பத்தியை படித்து பார்த்தால் 5,309 மாடுகளை காணவில்லை. பக்தர்கள் மாட்டைகொடுத்த பதிவுகள் இருக்கிறது. ஆனால் யார் ஏலம் விட்டது? மாடுகளை திருடி திமுகவினருக்கு விற்று விட்டீர்களா?
சரியாக செலவு செய்யப்படுகிறதா?
'வடிவேலு கிணற்றை காணோம் என்று சொன்னது போல்' திருச்செந்தூர் கோவிலில் 5,309 மாடுகளை காணவில்லை. அப்படி இருக்கும்போது எந்த தைரியத்தில் இந்து சமய அறநிலையத்துறை என்ற துறையை வைத்துக்கொண்டு அமைச்சர் காலை முதல் மாலை வரை வெள்ளை காவி உடையுடன் சுற்றிக்கொண்டுள்ளார்? கோவில் பணம் சரியாக செலவு செய்யப்படுகிறதா? என்பதற்காக தணிக்கை செய்யப்படுகிறது.
வருமானத்தை குறைத்து காட்டுகிறது
ஆனால், தணிக்கை செய்வதற்கான செலவையே அதிகமாக பெற்றுள்ளனர். தணிக்கைக்கு ஆன செலவை விட 4 மடங்கு அதிகமான பணத்தை கோவில்களில் இருந்து எடுத்துள்ளனர். தமிழக கோவில்களில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் தமிழக அரசு அந்த வருமானத்தை குறைத்து காட்டுகிறது. தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள், கோவில் சம்மந்தப்பட்ட பொருட்கள் மட்டும் 50,000 க்கும் மேல் இருக்கும் என 1989-ல் 'யுனெஸ்கோ' கூறியது.
ஒரு சிலையையாவது மீட்டுள்ளதா?
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் மட்டும் 228 பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. 6 முறை ஆட்சியில் இருந்த தி.மு.க. ஒரு சிலையையாவது மீட்டு கொண்டு வந்ததா? என்பதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். அது போல் மத நம்பிக்கையும் இறை நம்பிக்கையும் இல்லாமல் கோயிலின் மரபு சார்ந்த விஷயங்களில் திமுக அரசு தொடர்ந்து செய்து வரும் அத்துமீறல்களால் பக்தர்களை வஞ்சித்து வருகிறது" என்றார்.