மிஷன் சக்சஸ்.. சீனாவுக்கு குறி வைக்கும் ஆவடி! "பீஷ்மாவை" களமிறக்கி இந்திய ராணுவம் புதிய சாதனை
சென்னை: சீனாவுடனான எல்லை பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமடைந்து வரும் நிலையில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ராணுவ தடவாளங்களை தயாரிக்கும் பணிகளும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. அந்த வகையில், ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் பீஷ்மா, அஜெயா பீரங்கிகளை தயாரித்து இந்திய ராணுவம் அசத்தியுள்ளது.
சர்வதேச அளவில் இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து கவனிக்க தக்கதாக மாறியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் சீனா மீதுள்ள வெறுப்பு காரணமாக தங்கள் முதலீடுகளை இந்தியா நோக்கி திருப்பியுள்ளனர். இப்படி இருக்கையில் எல்லையில் சீனாவுக்கும், இந்தியாவுக்குமான மோதல் போக்கும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கால்வான் பள்ளத்தாக்கில் நடந்தை மோதல் சம்பவத்தையடுத்து இந்தியா தனது எல்லையை தீவிரமாக கண்காணித்து, பலப்படுத்தி வருகிறது.

இந்த பணியில் பீரங்கிகள் இன்றியமையாததாகும். தமிழ்நாட்டை பொறுத்த அளவில் சென்னை ஆவடியில் பீரங்கி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து 1961ம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்துக்கு ரஷிய தொழில்நுட்பத்தில் பீரங்கிகள் தயாரித்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொழிற்சாலை கடந்த 2021ம் ஆண்டு பெருநிறுவனமாக மாற்றப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் பீரங்கிகளில் அஜெயா (டி-72), பீஷ்மா (டி-90) ஆகியவை மிகவும் முக்கியமானதாகும்.
சுமார் 41 ஆயிரம் கி.கி எடை கொண்ட அஜெய் பீரங்கிகள் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 460 கி.மீ வரை இதனால் பயணிக்க முடியும். அதேபோல மணிக்கு 60-75 கி.மீ வேகத்தில் இது இயங்கும் திறன் கொண்டதாகும். இதில் மிகவும் சக்தி வாய்ந்த V12 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிக்கிறத. எனவே போர்க்களத்தில், ஜல்லிக்கட்டு காளை போல இது துள்ளி விளையாடும். இந்த மாடல் தயாரிப்புகள் சர்வதேச அளவில் ஒரு சில நாடுகள்தான் கொண்டிருக்கின்றன.
அதேபோல பீஷ்மாவும் மிரட்டலான ஒரு பீரங்கிதான். இதன் எடை 41 ஆயிரம் கி.கி. ஆனால் வேகம் 60 கி.மீ அந்த அளவுக்கு வேகமாக இயங்கும் திறன் கொண்டவையாகும். இந்த வகை டேங்குகளில் ஒரு முறை டீசல் நிரப்பினால் சுமார் 550 கி.மீ வரை பயணம் செய்ய முடியும். மறைந்திருந்து தாக்குவதற்கு என பெயர்பெற்ற இந்த பீரங்கி இந்திய ராணுவத்தில் முக்கியமான ஒன்றாகும். இதற்கு முன்னர் வரை இவை இரண்டும் ரஷ்ய தொழில்நுட்பத்தில் வெளிநாடுகளிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்து தயாரிக்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது இது உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், அஜெயா பீரங்கியின் 96 சதவீத பாகங்களும், பீஷ்மா பீரங்கியின் 83 சதவீத பாகங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப் படுகின்றன. பீஷ்மா பீரங்கியை இயக்க பயன்படுத்தப்படும் 'ஸ்டார்டர் ஜெனரேட் டர்,அஜெயா மற்றும் குண்டுகளை இயக்க பயன்படுத்தப்படும் 'லிங் லோடிங் மிஷின்', டிரைவர்களுக்கு காற்று செல்லும் வகையில் உள்ள 'வெண் டிலேட்டர் சிஸ்டம்', 'அலார்ம் சிக்னலிங் யுனிட்', தானியங்கி கட்டுப்பாட்டு அலகு, ரிலே ரெகுலேட்டர் உள்ளிட்ட கருவிகள் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே தயாரிக்கப்படுகிறது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்போது சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லை பிரச்னை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த பீரங்கி தயாரிப்புகள் ராணுவத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.












Click it and Unblock the Notifications