யானை, குதிரைகள் வரவேற்பு..கோட்டை முகப்பு- பாகுபலிக்கே டஃப் கொடுக்கும் ஈபிஎஸ் டீமின் பிரமாண்ட பிளான்!
சென்னை : நாளை நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுவில் 'பாகுபலி'க்கே டஃப் கொடுக்கும் வகையில் யானை, குதிரைகளை வைத்து எடப்பாடி பழனிசாமி வரவேற்பு கொடுக்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஓபிஎஸ் தரப்பினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பொதுக்குழு ஏற்பாடுகளைச் செய்து வந்தாலும், கொஞ்சமும் சளைக்காமல் பொதுக்குழுவில் பிரமாண்டத்தைக் காட்டி வருகின்றனர் ஈபிஎஸ் தரப்பினர்.
பொதுக்குழு ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் பென்ஜமின் மேற்பார்வை செய்து வரும் நிலையில், இன்று வானகரம் சென்று முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

பிரமாண்ட செட்
சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட நிறைவுகட்டத்தை எட்டியுள்ளது. பொதுக்குழு நடைபெறும் இடத்தில், பந்தல், மேடை, அலங்காரங்கள், இருக்கைகள் அமைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. பொதுக்குழுவுக்காக கோட்டை அமைப்பில் பிரமாண்டமான முகப்பு வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் இருபுறமும் எடப்பாடி பழனிசாமியின் உருவம் இடம்பெற்றுள்ளது.

பேனர்கள்
பொதுக்குழுவுக்கான பேனர்கள் அனைத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தின் படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பொதுக்குழு நடைபெறும் இடத்துக்கு வெளியே வழிநெடுக, எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படங்கள் கொண்ட டிஜிட்டல் பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன. வானகரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு செல்லும் வானகரம் - அம்பத்தூர் சாலை வரை வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கொடிகள்
மேலும், வழிநெடுக அதிமுக கொடிகள் வரிசையாக கட்டப்பட்டு, அப்பகுதியே திருவிழாக் கோலமாக காட்சியளிக்கிறது. அதிமுகவில் கட்சி ரீதியாக உள்ள 75 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக மேஜை போடப்பட்டு அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தடபுடல் ஏற்பாடு
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு மதியம் தடபுடல் சைவ உணவு விருந்துக்கு ஏற்பாடு செயப்பட்டுள்ளது. இதில் வடை, பாயாசத்துடன் அமர்க்களமான உணவுகள் பரிமாற திட்டமிடப்பட்டுள்ளது. மதியம் விருந்து நடைபெறும் இடமும் தயார் நிலையில் உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் சாப்பிடும் இடம் பொதுக்குழு அரங்கிலிருந்து தனியாக பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

யானை, குதிரைகள் வரவேற்பு
பொதுக்குழு கூட்டத்தில் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்காக ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான் மாநில இசை கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கலைஞர்களின் நடனம், நாட்டிய நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க 2 யானைகள், 10 குதிரைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி ரேஞ்சில் யானை, குதிரைகள் வரவேற்பெல்லாம் அளிக்கப்பட இருப்பதால் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.

ஆர்.எஃப்.ஐ.டி கார்டு
மேலும், பொதுக்குழு கூட்டத்துக்கு வருகை தரும் பொதுக்குழு உறுப்பினர்களின் வருகையை தானியங்கி முறையில் பதிவு செய்வதற்கான அமைப்புகள் பொதுக்குழு அரங்க நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளன. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தில் ஆர்எஃப்ஐடி வசதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அடையாள அட்டைகளை ஸ்கேன் செய்ய பொதுக்குழு கூட்ட அரங்கில் மொத்தம் 16 அதிநவீன நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications