உஷார் மக்களே.. உங்க சிம்கார்ட், உங்க பணத்தையே கொள்ளையடிக்கும்! அதுதான் "சிம் ஸ்வாப்!"
சென்னை: கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்..நீங்கள் பயன்படுத்தி வரும் சிம்கார்ட் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. அந்த தொலைபேசி எண்ணில் தான் உங்களது வங்கிக்கணக்கு இணைக்கப்பட்டிருக்கிறது. அதே எண்ணில் புதிய சிம்கார்டை வேறொருவர் வாங்குகிறார். அந்த புதிய சிம்கார்டை இயக்கி, கூகுள் பே, பேடி எம் போன்ற செயலிகள் மூலம் உங்கள் பணம் திருடுபோனால் என்னவாகும். படிக்கும்போதே பகீரென்று இருக்கிறதல்லவா..இப்படி ஒரு சம்பவம் சென்னையில் நடந்திருக்கிறது.
இப்படி சிம்கார்ட் மூலம் கொள்ளையடிக்கும் முறைக்கு சிம் ஸ்வாப் (SIM SWAP) என்று பெயர். இந்த நூதன முறையைப் பயன்படுத்தி, சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையின் வங்கிக் கணக்கிலிருந்து லட்சக்கணக்கில் பணம் திருடப்பட்டது. திருடியவர்களை சென்னை சைபர் கிரைம் போலீசார் தற்போது கைது செய்திருக்கிறார்கள்.
"எங்கள் மருத்துவமனையின் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணின் சேவை துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு எங்கள் மருத்துவமனை வங்கி கணக்கிலிருந்து ரூ.24 லட்சம் திருடப்பட்டுள்ளதாக" சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல கண் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.
கருப்பு-சிவப்பு பக்கத்துலேயே தாமரையா! அடுத்தடுத்து நடப்பட்ட திமுக - பாஜக கொடிகள்.. உண்மை என்ன?
விசாரணை
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வங்கி பரிவர்த்தனைக்காக 5 சிம்கார்டுகளை வாங்கி இருப்பதும், அந்த சிம்கார்டுகள் தொலைந்துவிட்டால் உடனடியாக பயன்படுத்திக் கொள்ள 5 டம்மி சிம்கார்டுகளும் வழங்கி இருப்பது தெரியவந்தது. இப்படி பயன்படுத்தப்பட்ட செல்போன் எண் ஊழியர்களுக்கு சம்பளம் போடும் வங்கிக் கணக்கோடு இணைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த வங்கிக் கணக்கிலிருந்து தான் சுமார் 25 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பதை போலீஸார் விசாரணையில் கண்டுபிடித்தனர். மருத்துவமனை பெயரில் போலியான அடையாள அட்டைகளை சமர்ப்பித்து இ-சிம் கார்டினை கொள்ளையர்கள் வாங்கி இருக்கிறார்கள். போலி சிம்கார்டை உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்டிவேட் செய்யப்பட்டிருந்தது. அந்த சிம்கார்டை பயன்படுத்தி, வங்கிக்கணக்கிலிருந்த 24 லட்சம் ரூபாய் பணமும், மேற்கு வங்கத்தில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டது.
சிக்கிய கொள்ளையர்கள்
மேற்கு வங்கத்தில் இருக்கும் 16 வங்கி கணக்கு யாருடையது என்பதையும், எங்கிருந்ததெல்லாம் அந்த வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுப்பதையும் போலீஸார் கவனித்து வந்தனர். வங்கிக் கணக்கில் கொடுக்கப்பட்டிருந்த முகவரி போலியானது என்பது தெரியவந்தது. அப்போது கொல்கத்தாவில் இருக்கும் ஒரு ஏடிஎம்மில், சம்பந்தப்பட்ட வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுத்திருப்பது தெரியவந்தது. அந்த ஏடிஎம்மில் 2 பேர் பணத்தை எடுத்து செல்லும் சிசிடிவி காட்சி பதிவாகியிருந்தது.
பீகார் கொள்ளையன்
வீடியோ ஆதாரத்தைவைத்து சைபர்க்ரைம் போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். விசாரணையின் அடிப்படையில் பீகாரைச் சேர்ந்த ராகேஷ் குமார் சிங் மற்றும் ரோகோன் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சயந்தன் முகர்ஜி, ராகுல் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ இ-மெயிலை ஹேக் செய்து கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, இ-மெயில் மூலம் புதிய சிம் கார்ட் வாங்கி இந்த நூதன மோசடியில் ஈடுபட்டதாக விசாரணையின் போது கொள்ளையர்கள் தெரிவித்தனர்.
தப்பிக்க என்ன வழி
உங்கள் மொபைல் ஃபோனின் நெட்வொர்க் நிலை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் நீண்ட காலமாக எந்த அழைப்பு அல்லது SMS அறிவிப்புகளையும் பெறவில்லை எனில், ஏதோ தப்பு நடந்துள்ளது என்று பொருள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மோசடிக்கு ஆளாகவில்லை என்பதை உறுதிப்படுத்த மொபைல் ஆபரேட்டரை தொடர்பு கொண்டு விசாரிக்க வேண்டும். சில மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு சிம் ஸ்வாப் பற்றி எச்சரிக்க எஸ்எம்எஸ் அனுப்புகிறார்கள். அல்லது நீங்களேதான் உஷாராக இருக்க வேண்டும். உங்கள் தொலைபேசியில் தொடர்ந்து தெரியாத அழைப்புகள் வந்தால், உங்கள் தொலைபேசியை ஸ்விட்ச் ஆப் செய்ய வேண்டாம், அதற்கு பதிலளிக்க வேண்டாம். இது உங்கள் மொபைலை முடக்கி வைப்பதற்கு உங்களை ஏமாற்றும் ஒரு தந்திரமாக இருக்கலாம், இதனால் உங்கள் மொபைல் இணைப்பு பாதிக்கப்படுவதை நீங்கள் அறிய முடியாது.வங்கி கணக்கில் மாற்றங்கள் நடந்தால் உங்களுக்கு அலர்ட் மெசேஜ் வரும் வகையில் வங்கியை தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். விழிப்போடு இருங்கள். உங்கள் பணத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.