இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி.. 3வது நாளாக தொடரும் சிகிச்சை.. என்ன நடந்தது?
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவுக்கு 3வது நாளாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகன் மனோஜ் மறைவுக்கு பின் இயக்குநர் பாரதிராஜா கடுமையான மன உளைச்சலில் இருந்த நிலையில், அவர் மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்வில் இருந்தார். அண்மையில் சென்னை திரும்பிய அவர், தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.
16 வயதினிலே படத்தின் மூலமாக இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த பாரதிராஜா, சிவப்பு ரோஜாக்கள், கிழக்கு சீமையிலே, முதல் மரியாதை, வேதம் புதிது என்று இந்திய சினிமாவுக்கே அடையாளமாகினார். தற்போது நடிகராக பல்வேறு படங்களில் பாரதிராஜா அசத்தி வந்த நிலையில், திடீரென அவரின் மகன் மனோஜ் பாரதிராஜா மார்ச் மாதத்தின் போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழ் சினிமாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மகன் மனோஜின் மறைவால் இயக்குநர் பாரதிராஜா கடுமையான மன உளைச்சலில் இருந்தார். பெரிதாக சினிமாவில் கவனம் செலுத்தாமல் குடும்பத்தினருடன் இருந்து வந்தார். இதன்பின் மலேசியாவில் உள்ள தன்னுடைய மகளின் வீட்டில் சில காலம் பாரதிராஜா ஓய்வில் இருந்தார்.
மகன் மனோஜின் இறப்பில் இருந்து பாரதிராஜாவால் மீண்டு வர முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் பாரதிராஜாவின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் பாரதிராஜா, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் விசாரிக்கையில், வழக்கமான பரிசோதனைக்காக பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி இருக்கின்றனர். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications