அடிதூள்! சென்னை வருகிறது ரோப் கார்.. மெரினா டூ பெசன்ட் நகர் இனி பறந்தே போகலாம்.. கலக்கல் அறிவிப்பு
சென்னை: சென்னை மெரினா கடற்கரையிலிருந்து பெசன்ட் நகர் எலியட் கடற்கரை வரை 4.6 கிமீ தூரத்திற்கு ரோப் கார் சேவை அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு தலைநகர் சென்னையில் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று மெரினா. விடுமுறை நாட்களில் சென்னை மெரினாவில் கூட்டம் அலை மோதும். பல லட்சம் பேர் பண்டிகை நாட்களில் வருகிறார்கள்.
உலகின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான மெரினாவுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை இருந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக ரோப் கார் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை இருக்கிறது.

ரோப் கார்
இது தொடர்பாக நீண்ட காலமாக விவாதம் இருக்கும் போதிலும் கூட இன்னும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலேயே இருந்தது. இந்த காத்திருப்பு இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. மெரினா ரோப் கார் சேவை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மொத்தம் 6 மாநிலங்களில் மத்திய அரசு ரோப் கார் சேவையை அமைக்க முடிவு செய்துள்ளது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய இடங்களிலும், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் தலா ஒரு இடத்திலும் ரோப் கார் சேவையை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

சென்னை மெரினா
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5 கிமீ தூரத்திற்கு ரோப்கார் சேவையை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு அடுத்து சென்னை மெரினா கடற்கரையிலிருந்து பெசன்ட் நகர் எலியட் கடற்கரை வரை 4.6 கிமீ தூரத்திற்கு ரோப் கார் சேவை அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளில் மத்திய அரசு இப்போது இறங்கியுள்ளது. இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.

மத்திய அரசு
புவிசார் தொழில்நுட்பம் உள்ளடக்கிய பல்வேறு பொறியியல் ஆய்வுகள் இது தொடர்பாக நடத்தப்பட உள்ளது. மேலும், மெரினாவில் கடற்கரையில் இந்த ரோப்கார் சேவை அமையவுள்ளதால் சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பாக ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அதன் பிறகே இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு சென்னைவாசிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் டிராபிக்
சென்னையில் டிராபிக் எந்தளவுக்கு உச்சத்தில் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் பீக் நேரத்தில் சொல்லவே வேண்டாம். டிராபிக்கில் நிற்காமல் பறந்து செல்ல வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். அந்த கனவு இப்போது நனவாக உள்ளது. சில ஆண்டுகளில் இதற்கான பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தமிழ்நாட்டில் கொடைக்கானல் - பழனி இடையே ரோப் கார் சேவை வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேயர் பிரியா
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மெரினாவில் ரோப்கார் கொண்டு வருவது குறித்து சென்னை மாநகர மேயர் பிரியா சில முக்கிய தகவல்களைத் தெரிவித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில்,"முதலில் 3.5 கி.மீ., தூரத்திற்கு இந்த ரோப் கார் திட்டம் கொண்டு வரப்படும். இது மற்றொரு போக்குவரத்து முறையாகவும் இருக்கும். வரும் காலங்களில் இது நகரின் பிற பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும்" என்று அவர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications