"கொக்கி" போட்ட கொங்கு ஈஸ்வரன்.. பலத்தை நிரூபிக்க ரெடியா?.. டக்கென கவனிக்கும் தமிழக பாஜக.. என்னாச்சு
கொங்கு ஈஸ்வரன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரஉள்ள நிலையில், தமிழக பாஜகவுக்கு, கொங்கு ஈஸ்வரன் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.. இது தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பாஜக மும்முரமாகி வருகிறது.. இதுகுறித்து, அக்கட்சியின் மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்தார்.
அப்போது, ஏற்கனவே ஈரோடு கிழக்கில் 8,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். எனவே, இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. யார் போட்டி என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும் என்று கூறியிருந்தார்.
விவசாயிகள் எந்த உதவி கேட்டாலும் இல்லையென்று சொல்லாதவர் காசியண்ண கவுண்டர்! கொங்கு ஈஸ்வரன் உருக்கம்!
ஓங்கி ஒலிக்கும்
அந்தவகையில், அதிமுக கூட்டணியில் போட்டியிட பாஜக தீவிரமாக உள்ளதாக தெரிகிறது.. ஆனால், சின்னம் பிரச்சினையால் அதிமுகவும், தமாகாவும் போட்டியிட தயங்கினால் பாஜக களம் இறங்க திட்டமிட்டுள்ளது. நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, இதுதொடர்பாக விவாதித்து இருக்கிறார்கள். இடைத்தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலையை போட்டியிட வைத்து சட்டசபைக்கு அனுப்பினால் பாஜகவின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
இளங்கோ
எனவே, இதுபற்றி அண்ணாமலையிடம் கேட்டபோது, கட்சி தலைமை தெரிவித்தால் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.இளங்கோ போட்டியிட்டார். அந்த தேர்தலில் அண்ணாமலை 68 ஆயிரத்து 553 ஓட்டுகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த தேர்தலில் அண்ணாமலை களம் இறங்கினால் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் நேரடி போட்டி ஏற்படும் என்றே தெரிகிறது.
சவாலுக்கு சவால்
அதுமட்டுமல்ல, "அண்ணாமலையை நிறுத்தி வெற்றிபெறச் செய்து தமிழக சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டுமென மூத்த நிர்வாகிகளும் தன்னிடம் தெரிவித்ததாக அமித்ஷாவே", நேற்றைய தினம் அண்ணாமலையிடம் சொன்னாராம். எனவே, அண்ணாமலை வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா? என்ற ஆர்வம் எகிறிவரும் நிலையில், கொங்கு ஈஸ்வரன் ஒரு சவால் விடுத்துள்ளார்.. ஈரோட்டில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நிறுவனத் தலைவர் ஈஸ்வரன் எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சொல்லும்போது, திமுக கூட்டணி கட்சி வலுவாக இருக்கிறது.. திமுக கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுக்கும் கட்சி... அதனால் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு அளிப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
முரண்பாடுகள்
திமுக கூட்டணியில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவர்களது வெற்றிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பாடுபடும்... அதிமுகவில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஒரு முடிவு இல்லாமல் இருக்கிறார்கள்.. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருவதாக சொல்லி வருகிறார்கள். எந்த அளவுக்கு பாரதீய ஜனதா கட்சி வளர்ந்து வருகிறது என்பதை நிரூபிக்க அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு அவர்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஓபன் சேலஞ்ச்
இதுவரை பாஜக வேட்பாளர் யார் என்று தெரியாத நிலையில், முன்னதாக, பாஜக முன்னாள் நிர்வாகியான காயத்ரி ரகுராம் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.. அதில், "ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன். அப்படிப் போட்டியிட்டால் நான் உங்களை எதிர்த்து நிற்பேன் என்றும் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள். நீங்கள் தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடா என்று பார்ப்போம்" என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.