பெரிய விக்கெட்.. பார்டரை தாண்டும் காங் எம்எல்ஏ.. கமலாலயத்திற்கு ரூட்! போச்சே.. பரபரக்கும் காங்கிரஸ்!
சென்னை : தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரை கட்சிக்குள் கொண்டு வரும் வேலையில் தமிழக பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறதாம். காங்கிரஸ் கட்சிக்குள் சமீபத்தில் வெடித்த கோஷ்டி மோதலைத் தொடர்ந்து தென் மாவட்டத்தைச் சேர்ந்த சிட்டிங் எம்.எல்.ஏ ஒருவர் கடுமையான அப்செட்டில் இருக்கிறாராம். அவரது மைண்ட் வாய்ஸை கேட்ச் பிடித்த தமிழக பாஜகவினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் புயல் கதர்க்கட்சிக் கரையைக் கடந்து கமலாலயத்தில் கேம்ப் போடக்கூடும் என்கிறார்கள் காங். பாஜக வட்டாரத்தினர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்ற தலைமை ஆலோசித்து வரும் நிலையில், அந்த பதவிக்கு சிட்டிங் எம்.எல்.ஏக்கள் சிலரும் போட்டி போட்டனர். அதில் இந்த தென்மாவட்ட புள்ளியும் அடக்கம்.
ஆனால், இவருக்கு சாதகமான எந்த பதிலும் கிடைக்கவில்லையாம். போதாக்குறைக்கு அடுத்து சீட் கிடைப்பதே கடினம் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இதனால், கடுமையாக அப்செட்டான அவர், கட்சி நிர்வாகிகளிடமே சீறியுள்ளார். இந்த தகவல் தமிழக பாஜகவினரையும் எட்டவே, அவர்கள் கொக்கியைப் போட்டுவிட்டார்களாம்.

ராகுல் காந்தி யாத்திரை
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தனது பாரத் ஜோடோ யாத்திரையை
தொடங்கினார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நடைபயணத்தை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைபயணம் காஷ்மீரில் முடிவடைகிறது. ராகுல் காந்தியின் இந்த நடைபயணம் நூறு நாட்களைக் கடந்து வெற்றி நடை போட்டு வரும் நிலையில், இந்த யாத்திரையில் வழிநெடுக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும், பல்வேறு முக்கிய பிரபலங்களும் பங்கேற்று வருகின்றனர்.

ராகுலுடன் இணைந்த தலைவர்கள்
சமீபத்தில் தலைநகர் டெல்லிக்குள் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நுழைந்தபோது சோனியா காந்தியும் இந்த யாத்திரையில் கலந்து கொண்டார். ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரைக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன், இந்த யாத்திரையில் பங்கேற்றார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியும் பங்கேற்றார். சில வாரங்களுக்கு முன்பு மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவும் நடைபயணத்தில் பங்கேற்றார்.

நகம் கடிக்கும் பாஜக
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டது, தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு கமல்ஹாசன் வர இருப்பதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், திமுக கூட்டணி இன்னும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பாஜக கூட்டணி வைத்திருக்கும் அதிமுக 2 அணிகளாகப் பிரிந்து இருப்பது வெற்றிக்கு உதவாது என்று பாஜக தலைமை கருதுவதாக கூறப்படுகிறது. மேலும், தமிழக பாஜகவில் தற்போது நிலவி வரும் ஆடியோ, வீடியோ விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் டெல்லி பாஜக தலைமை கோபம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

காங். எம்.எல்.ஏவுடன் பேரம்
இதன் காரணமாக திமுக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த வேண்டும் என்றும் பாஜக நினைப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ ஒருவரை பாஜகவுக்கு கொண்டு வந்துவிட்டால் டெல்லியில் நல்ல பெயர் எடுக்கலாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பெரிய அளவில் இதற்காக பண பேரம் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் மீண்டும் வெடித்த கோஷ்டி அரசியலை பயன்படுத்தி, சிட்டிங் எம்.எல்.ஏவை கட்சிக்குள் இழுக்கும் நடவடிக்கையை பாஜக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

எம்.எல்.ஏ கோபம்
காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் கோஷ்டி மோதல் பூதாகரமான நிலையில், சத்தியமூர்த்தி பவனே அமளிதுமளியானது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் டெல்லிக்குச் சென்று தலைமையிடம் புகார் தெரிவித்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்ற தேசிய தலைமை திட்டமிட்டுள்ளது. இதில் பலர் போட்டி போட்டு வரும் நிலையில், தென் தமிழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏவும் பதவியை எதிர்பார்த்து மூவ் செய்தாராம். ஆனால், டெல்லி தலைவர்களோ, உங்களுக்கு மீண்டும் சீட் கிடைப்பதே பெரிய காரியம் எனச் சீண்டிவிட்டார்களாம்.

தூது போன கமலாலய தலைகள்
இதனால் அதிருப்தியின் உச்சத்துக்குப் போன அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ, கடந்த சில நாட்களாக, காங்கிரஸ் தலைவர்களை கோபமாக விமர்சித்து வருகிறாராம். இந்த விவகாரம் இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. ஆனால், இந்த மேட்டரை மோப்பம் பிடித்த கமலாலய வட்டாரம் அவரிடம் மாநில தலைவர் சார்பாக தூது சென்றுள்ளது. பாஜகவில் சேருங்கள், வந்ததுமே முக்கியமான மாநில பொறுப்பைத் தருகிறோம், அடுத்த தேர்தலில் சீட்டும் கிடைக்கும் என உறுதி கொடுத்துள்ளனராம். இதனால், அவர் ஆழ்ந்த யோசனையில் இருந்து வருகிறாராம்.

பெரும் பண பேரம்
இப்போது கட்சி தாவினால், தனது எம்.எல்.ஏ பதவி பறிபோகும். ஆனால், இனியும் கட்சியில் இருப்பதில் பயனில்லை. அதனால், பாஜகவில் லம்ப்பாக வாங்கிக்கொண்டு தாவலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். இதையடுத்து, தன்னிடம் பேசிய பாஜக தலைவர்களிடம் ஒரு டீலை முன்வைத்திருக்கிறார். சீட் + ஸ்வீட் எனும் அந்த டீலை முன்னிட்டுத்தான் தற்போது அவருக்கும் - கமலாலய தரப்புக்கும் இடையே பேரம் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். விரைவில் தாமரைக்கட்சிக்கு அனுகூலமான தகவல் கிடைக்கும் என்கிறார்கள்.

2 டார்கெட்
இன்னும் சில நாட்களுக்குள், அந்த சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏவை பாஜகவுக்கு கொண்டுவருவதோடு, அவரை காங்கிரஸ் மேலிடத்திற்கு எதிராக பேச வைக்க வேண்டும் என்றும் வேகமாக பணிகள் நடந்து வருகிறதாம். தமிழக பாஜக மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களை இதன் முலம் திருப்புவதோடு, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின்போது இந்தச் சம்பவம் நடப்பதால், ராகுல் யாத்திரை கலகலத்துவிட்டது என்றும் இதன் மூலம் காட்டலாம் என்று என்று பாஜக தரப்பு பரபர திட்டங்களை வைத்துள்ளதாம்.

தனிப்பட்ட லாபம்
இதில் தனிப்பட்ட முறையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் லாபம் என்பதுதான் அவர் இதில் தீவிரம் காட்டி வருவதற்கான காரணமாம். அண்ணாமலை பாஜக தலைவரான பிறகு பெரிய தலைவர்கள் யாரும் கட்சியில் இணையவில்லை, போதாக்குறைக்கு முன்பு சேர்ந்த சிலரும் கட்சியை விட்டு பிய்த்துக்கொண்டு போய்விட்டனர். சமீபத்திய சில நிகழ்வுகளாலும் தன் மீது கட்சி தலைமை அதிருப்தியில் இருக்கிறது. இதையெல்லாம் இந்த சிட்டிங் எம்.எல்.ஏ வருகையின் மூலம் ஈடுகட்டி விடலாம், தனது மைலேஜை ஏற்றி விடலாம் என்பதுதான் அவரது கணக்காம்.

காங். ஆலோசனை கூட்டம்
இதற்கிடையே, இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் முக்கிய ஆலோசனை நடக்க உள்ளது. ராகுல் காந்தியின் நடைபயணத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத் கலந்து கொள்கிறார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் என பலரும் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் இந்த காங்கிரஸ் எம்.எல்.ஏவின் அதிருப்தி பற்றி பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications