சுதந்திர வேட்கை பாய்ச்சிய...பெண் கல்வி போற்றிய...முண்டாசுக் கவிஞன்...நினைவு நாள்!!
சென்னை: சுப்ரமணிய பாரதியார் என்றாலே தமிழ் கவிஞர், சுதந்திர போராட்ட வீரர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி என்பது நமது நினைவுக்கு வரும், பெண்களின் சமூக நீதிக்கும், விடுதலைக்கும் சேர்த்தே இவர்தனது குரலை எழுப்பி இருந்தார்.
தன்னுடைய கவிதைகள், உணர்ச்சி மிகுந்த சிந்தனைகள் மூலம் மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி இருந்தார். தமிழ் மீது அதீத பற்று வைத்து இருந்தவர். "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" என்று பாடினார். இவருடைய கவிதைகளால் இவருக்கு "தேசிய கவி" என்ற பெயரும் கிடைத்தது.
மார்க் ஷீட் என்பது மாணவர்களுக்கு பிரஷர் ஷீட்... பெற்றோர்களுக்கு பிரெஸ்டீஜ் ஷீட் - பிரதமர் மோடி
சுப்பிரமணியன்
தமிழகத்தில் எட்டயபுரத்தில் 1882 ஆம் ஆண்டில் டிசம்பர் 11ஆம் தேதி சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். இவர் 5 வயது இருக்கும்போதே தாயை இழந்தார்.
பாரதி பட்டம்
சிறு வயது முதலே பாரதியாருக்கு தமிழ் மீது பற்று அதிகம். ஏழு வயதில் கவிதைகள் எழுதத் துவங்கினார். பதினொரு வயதில் கவிதை பாடும் ஆற்றலை பெற்றிருந்தார். இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், "பாரதி" என்ற பட்டத்தை இவருக்கு சூட்டினார். அன்று முதல் "சுப்பிரமணிய பாரதியார்" என்று அழைக்கப்பட்டார்.
அரசவை கவிஞர்
பள்ளியில் படிக்கும்போது, 1897 ஆம் ஆண்டு செல்லம்மாவை திருமணம் செய்து கொண்டார். தந்தையின் இறப்புக்குப் பின்னர் ஏழ்மையில் இருந்த பாரதியார் காசிக்கு சென்று தங்கினார். பின்னர் அங்கிருந்து திரும்பி எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.
முண்டாசு கவிஞன்
‘மீசை கவிஞன்' ‘முண்டாசு கவிஞன்' என்று அழைக்கப்பட்டவர். தமிழ் மீது அதீத பற்று இருந்தது என்றாலும், மற்ற மொழிகளான சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்று இருந்தார். கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி ஆகியவை பாரதியாரால் எழுதப் பெற்றன. கீதையை தமிழில் மொழிப் பெயர்த்தார்.
சுதேசிமித்திரன்
"இந்திய பத்திரிக்கையின்" மூலம் தமிழ்நாட்டில் மக்களிடையே சுதந்திர உணர்வை, வேட்கையை தட்டி எழுப்பினர். இதற்கு தமிழ்நாட்டு மக்களிடையே நல்ல ஆதரவு பெருகியது. இதைக் கண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியா பத்திரிக்கைக்கு தடை விதித்தது. பாரதியாரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார். சுதந்திரம் அடைவதற்கு முன்பே சுதந்திர தாகத்துடன், "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்" என்று பாடினார்.
யானை தாக்கியது
திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாரதியார் சென்று இருந்தார். அப்போது அங்கு இருந்த யானை எதிர்பாராவிதமாக பாரதியாரை தூக்கி எறிந்தது. இதில் பலத்த காயமடைந்து நோய் வாய்ப்பட்டார். 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் காலமானார். இவரது மரணம் தமிழக மக்களையே உலுக்கியது. அந்த ஏக்கம் இன்றும் தமிழக மக்களிடம் உள்ளது.
மணி மண்டபம்
எட்டயபுரம் மற்றும் சென்னையில் திருவல்லிக்கேணியில் பாரதியார் வாழ்ந்த இல்லங்கள் நினைவு இல்லங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு சிலை வைக்கப்பட்டுள்ளது.
பெண் கல்வி
"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்றார். பெண்களை நாட்டின் பெரிய சக்தியாக பார்த்தார். "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்... பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்ற உணர்வு கலந்த கவிதைகளை பாடினர்.
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்"
என்று பாடினர். பெண் கல்வி கற்றால் நாடே சிறந்து விளங்கும் என்று முழங்கினார். "பெண்ணுக்கு விடுதலை நீரில்லையென்றால்... பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை'' பெண்மை வாழ்கவென்று கூத்திடு வோமடா... பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா" என்றார்.