சேப்பாக்கத்துக்கு குறி வைத்து ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு
சென்னை: சேப்ப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்கு குறி வைத்த நடிகை குஷ்பு தற்போது சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கூட்டணியே உறுதியாகாத நிலையிலேயே சில தொகுதிகளில் இவர்தான் வேட்பாளர் என பிரசாரத்தையே தொடங்கியது பாஜக. சென்னை சேப்பாக்கத்தில் நடிகை குஷ்பு, ராஜபாளையத்தில் நடிகை கவுதமி ஆகியோர் இப்படி ஒரு விசித்திர பிரசாரம் செய்தனர்.
அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாகி 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 20 தொகுதிகளில் சேப்பாக்கம் தொகுதி, ராஜபாளையம் ஆகியவை இடம்பெறவில்லை. இதனால் நடிகைகள் குஷ்பு, கவுதமி ஆகியோர் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
பாஜக வேட்பாளர்கள்
இந்த நிலையில் இன்று பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 6 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை பாஜக அறிவித்திருக்கிறது.
ஆயிரம் விளக்கு குஷ்பு
தாராபுரத்தில் பாஜக தலைவர் எல். முருகன் போட்டியிடுகிறார். காரைக்குடியில் ஹெச். ராஜா போட்டியிடுகிறார். மேலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார்.
சேப்பாக்கம்- உதயநிதி- குஷ்பு
ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கு.க. செல்வம். இந்த தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடலாம் என்பதால் அதிருப்தி அடைந்து பாஜகவுக்கு போனார் செல்வம். இப்போது உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் எழிலன் நாகநாதன் போட்டியிடுகிறார்.
கவுதமிக்கும் வாய்ப்பு?
சேப்பாக்கத்தில் போட்டியிட நினைத்த குஷ்பு, கு.க. செல்வம் போட்டியிட விரும்பிய ஆயிரம் விளக்கு தொகுதியை பறித்துக் கொண்டார். இதேபாணியில் நடிகை கவுதமிக்கும் போட்டியிடும் வாய்ப்பை பாஜக கொடுக்கலாம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.