தடை விதியுங்கள்.. உதயநிதியை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது.. தேர்தல் கமிஷனில் பாஜக புகார்!
சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்து, அவரை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக சார்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் இரண்டு நாட்களே மட்டுமே பிரச்சாரம் மீதம் உள்ள நிலையில் தமிழக அரசியல் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதில் சில அரசியல் தலைவர்கள் செய்யும் தேர்தல் பிரச்சாரம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

சில நாட்களுக்கு முன் திமுக எம்பி ஆ. ராசா முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதில் ஆ. ராசாவிற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் வைக்கப்பட்டது. இதையடுத்து ஆ. ராசா 48 மணி நேரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட கூடாது என்று நேற்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் தற்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்து, அவரை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக சார்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு இவரின் பிரச்சாரத்திற்கு தடை விதித்து, நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் இருந்தும் நீக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று தாராபுரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், மறைந்த அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோரின் மறைவிற்கு பிரதமர் மோடி கொடுத்த தொல்லைதான் காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
உதயநிதியின் இந்த பேச்சு தேசிய அளவில் சர்ச்சையானது.
தேசிய பாஜக தலைவர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.அதோடு உதயநிதி ஸ்டாலினுக்கு சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லியின் மகள் சோனாலி ஜெட்லி பக்ஷி ஆகியோர் உதயநிதியின் விமர்சனத்திற்கு கோபமாக பதிலடி கொடுத்தனர்.
இறந்தவர்கள் குறித்து தவறாக பேச வேண்டாம் என்று உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். உதயநிதியின் பேச்சு சர்ச்சையான நிலையில் அவரின் வேட்புமனுவை தகுதி நீக்கம் செய்து, அவை தேர்தலில் போட்டியிட விடாமல் தடை செய்ய வேண்டும் என்று பாஜக சார்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications