அனுமதியின்றி போராடிய உமா ஆனந்த்.. குறி வைத்த போலீஸ்.. விசாரணைக்கு வாங்க.. பாய்ந்தது வழக்கு!
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை பக்தர்கள் வசம் ஒப்படைக்கக்கோரி கடந்த 31ம் தேதி கோயிலுக்குள் போராட்டம் நடைபெற்றது.
அனுமதியின்றி நடைபெற்ற இந்த போராட்டத்தையடுத்து புகாரின் பேரில் 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் உட்பட 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து விசாரணைக்காக உமா ஆனந்த்திற்கு மயிலாப்பூர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

போராட்டம்
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை பக்தர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என பாஜகவினரும், வலதுசாரி அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் செய்தி வெளியாகியிருந்தது. இதனையடுத்து கடந்த 31ம் தேதியான விநாயகர் சதுர்த்தியன்று மாலை இக்கோயிலில் வழிபட வந்த பாஜக பிரமுகர்கள் சிலர் கோயிலின் வாயிலை அடைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை
நவராத்திரி மண்டபத்தில் ஒன்று கூடிய அவர்கள், இக்கோயிலை பக்தர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தியதுடன் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, பக்தர்கள் கோயிலுக்குள் தரிசனத்திற்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது. இந்த செய்தியறிந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வழக்குப்பதிவு
பின்னர் காவல்துறையினர் அவர்களை ஒருவழியாக சமாதானப்படுத்தி கலைந்துபோக வைத்தனர். இந்த சம்பவம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், அனுமதியின்றி பொது இடத்தில் கூட்டம் கூடுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சென்னை மாநகராட்சி 134வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெங்டேஷ், இந்து தமிழர் கட்சி தலைவர் ரவி என 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

சம்மன்
இதனைத் தொடர்ந்து வழக்கு குறித்த விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கவுன்சிலர் உமா ஆனந்திற்கு மயிலாப்பூர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். தற்போது இந்து சமய அறநிலையத்துறை கடந்த ஓராண்டில் மட்டும் 300 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளது என்றும், இதுவரை ரூ.2,000 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications