மோடி வாழ்க! ஸ்டாலின் வாழ்க! நேரு விளையாட்டு அரங்கில் பாஜக, திமுகவினர் மாறி மாறி கோஷம்.. பரபரப்பு
சென்னை: பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5.45 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வருகை தர உள்ளார். இதில் முதல் அமைச்சர் ஸ்டாலினும் பங்கேற்க உள்ளதால் பாஜக, திமுக பிரமுகர்கள் போட்டிப்போட்டு கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
Recommended Video
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை பிரமாண்டமான விழா நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.
சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்என் ரவி, முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க உள்ளனர்.

சென்னையில் பிரதமர் மோடி
அதன்பின் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு ஸ்டேடியத்தை சென்றடைகிறார். அதன்பிறகு காரில் நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை, பெரியார் சிலை சந்திப்பு, பல்லவன் சாலை, சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரில் உள்ள பாலத்தின் வழியாக சென்று பூந்தமல்லி நெடுஞ்சாலை, பெரியமேடு வழியாக நேரு உள் விளையாட்டு அரங்கை அடைவார்.

ரூ.31,400 கோடி திட்டங்கள்
நேரு உள்விளையாட்டு மைதானத்துக்க மாலை 5.45 மணிக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி இரவு 7 மணி வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் ரூ.31,00 கோடி மதிப்பிலான 11 மக்கள் நலத்திட்டங்களை அவர் துவங்கி வைத்து பேசுகிறார். இதில் முதல் அமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசார் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

திமுக, பாஜக பிரமுகர்கள்
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்பது இதுதான் முதல் முறையாகும். இதனால் விழா அரங்கத்திலும், வெளிப்புறத்திலும் திமுக பிரமுகர்கள், பாஜக பிரமுகர்கள் குவிந்துள்ளனர். விளையாட்டு அரங்கத்தின் இடதுபக்கத்தில் பாஜகவினர் உள்ளனர். பிற இடங்களில் திமுகவினர் இருக்கின்றனர்.

போட்டி கோஷம்
இந்நிலையில் திடீரென்று பாஜகவினரும், திமுகவினரும் அரங்கத்தின் உள்ளே போட்டி கோஷமிட்டனர். பிரதமர் வாழ்க, நரேந்திர மோடி வாழ்க என பாஜகவினர் கோஷமிட்ட நிலையில், அதற்கு போட்டியாக திமுகவினர் கருணாநிதி வாழ்க, தளபதி வாழ்க, ஸ்டாலின் வாழ்க என முழக்கமிட்டனர். இதனால் அரங்கம் அதிர்ந்ததோடு பரபரப்பு தொற்றிக்கொண்டது.

போலீசார் பேச்சுவார்த்தை
இதையடுத்து அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் கோஷமிடுதல் என்பது நிறுத்தப்படாமல் தொடர்ந்தது. விழா நடைபெறும்போதும் இதுபோன்ற போட்டி கோஷமிடுதல் நடந்தால் அது பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் போலீசார் இதற்கு தீர்வு காணும் வகையில் போலீசார் செயல்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications