கலசார தாக்குதலை நடத்தும் மத்திய அரசு... பாஜகவிடம் அடிபணிந்த அதிமுக.. விளாசும் திமுக தலைவர் ஸ்டாலின்
சென்னை: பாஜகவுக்கு அதிமுக அரசு அடிபணிந்துவிட்டது என்று விமர்சித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் மீது கலசாரா தாக்குதலை பாஜக நடத்தி வருவதாகவும் இது தமிழகத்தைக் காக்கும் தேர்தல் என்றும் பேசினார்.
Recommended Video
சேலம் மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசுகின்றனர்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் திமுக தொண்டர்களைக் கருணாநிதியைப் போல 'உயிரிலும் மேலான அன்பு உடன் பிறப்புகளே' என்று அழைத்து தனது உரையைத் தொடங்கினார்.
ஸ்டாலின் பேச்சு
தொடர்ந்து பேசிய அவர், "இந்த தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்க இங்கு வந்துள்ளேன். ஏதோ தேர்தலுக்காக மட்டும் உங்களைச் சந்திப்பவன் இல்லை இந்த ஸ்டாலின். எப்போதும் பொதுமக்களின் சுக மற்றும் துக்க நிகழ்வுகளில் பங்கேற்பவன் தான் ஸ்டாலின். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு மட்டும் ஓட்டு கேட்டு நான் இங்கு வரவில்லை. தமிழ்நாடு முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கும் எனக்கும் ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். இவர்கள் வென்றால்தான் என்னால் முதல்வராக வேண்டும்.
பாஜகவுக்கு அடிபணிந்த அதிமுக
கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழகம் பாதாளத்திற்குப் போயுள்ளது. அதிமுக ஆட்சியில் சுமார் 50 ஆண்டுகள் தமிழ்நாடு பின்னோக்கி சென்றுவிட்டது. ஜெயலலிதா மரணத்திற்குப் பின், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த ஆட்சி மத்திய பாஜக அரசுக்கு அடிபணிந்து இருக்கும் ஆட்சியாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீட், புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு உள்ளிட்டவை மூலம் தமிழ்நாட்டை பாஜக அழித்து வருகிறது. மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுகிறது.
தமிழகத்தைக் காக்கும் தேர்தல்
தற்போது நடைபெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல. இது தமிழகத்தைக் காப்பாற்ற நடைபெறும் தேர்தல். இது சுயமரியாதையைக் காப்பாற்றும் தேர்தல், உரிமையை மீட்கும் தேர்தல். இதைப் பொதுமக்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. முதல்வர் பழனிசாமி, ஒ பன்னீர் செல்வம் இருவருக்கும் மக்கள் மீது அக்கறை இல்லை, பணம் தான் அவர்களுக்கு முக்கியம். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தின் உரிமைகளை மறுக்கிறது. அதை மாநிலத்திலுள்ள அதிமுக அரசும் அதைத் தட்டி கேட்கவில்லை.
ரசாயன மற்றும் கலாச்சார தாக்குதல்
ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நியூட்டிரினோ, கூடங்குளம், சேலம் எட்டு வழிச் சாலை என்று மத்திய அரசு தமிழ்நாட்டின் மீது ரசாயன தாக்குதலை நடத்துகிறது. இதுமட்டுமில்லாமல் இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, நீட், மத்திய அரசு ஊழியர்கள் தமிழில் பேச தடை விதிப்பது, தமிழ்நாட்டில் இருக்கும் பணியிடங்களை வடநாட்டவரை கொண்டு நிரப்புவது என கலசார தாக்குதலையும் மத்திய அரசு நடத்துகிறது. இந்த ரசாயன தாக்குதலையும் கலாச்சார தாக்குதலையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் பாஜக
தமிழ்நாட்டில் பாஜகவால் வேரூன்ற முடியவில்லை. இதனால் அதிமுகவை மிரட்டி, அச்சுறுத்தி அதிமுக நிழலில் பாஜக பயணிக்கிறது. ஜெயலலிதா மரணத்திற்கு பின் அதிமுகவில் நடைபெறும் அனைத்தும் பாஜகவின் சதி தான். பாஜக தலைவர்கள் டெல்லியிலிருந்து அடிக்கடி இங்கு வந்து செல்வதே அதற்குச் சாட்சி.
கூட்டணி ஏன்
மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் மாநிலத்திற்குத் தேவையான நிதி கிடைப்பதாகத் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் அபாண்டமாகப் பொய் கூறுகிறார். புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் போது தமிழகம் கேட்கும் நிதியை மத்திய அரசு ஒழுங்காகத் தரவில்லை. அப்புறம் எதற்கு பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும்?
ராகுலிடம் வேண்டுகோள்
ராகுல் காந்தி என்னைச் சார் என்று அழைக்கக் கூடாது, 'பிரதர்' என்று கூப்பிட வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். ராகுல் பிரதரிடம் ஒரு வேண்டுகோள். இன்று இந்தியா மதவாத பாசிச சக்தியிடம் மாட்டிக் கொண்டுள்ளது. இன்று இந்தியாவைக் காக்கும் பொறுப்பு உங்களிடம் தான் உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதிறியதால்தான் பாஜக வெல்ல முடிந்தது. எனவே, தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒரு மாபெரும் கூட்டணியை அமைக்கும் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆறடி இடம் கொடுக்க மறுத்தவர்கள்
கருணாநிதி அண்ணா பக்கத்தில் இடம் கொடுக்க மறுத்த கயவர்கள் இவர்கள். பிரதமர் மோடி, அமித்ஷா என்று பலரும் அப்போது என்னிடம் தொலைப்பேசியில் பேசினார்கள். அவர்களிடம் நான் வைத்த ஒரே வேண்டுகோள், கலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுக்க வேண்டும் என்பதே ஆனால், மோடி உட்பட எவரும் அதைக் கண்டுகொள்ளவில்லை" என்று ஸ்டாலின் பேசினார்.