Jayakumar: திமுக-வின் அரசியல் காழ்ப்புணர்ச்சி - ஜெயக்குமார் கைது குறித்து கண்டித்த அண்ணாமலை
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது, திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை அன்று நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது சென்னை ராயபுரத்தில் 49ஆவது வார்டில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதாக சொல்லி, அங்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அங்கிருந்தவரை ஓட்டிப்போட விடாமல் தடுத்திருக்கிறார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அந்த நபரை அரைநிர்வாணாக்கி தாக்கியதாக ஜெயக்குமார் மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்தச் சூழலில் திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் ஜெயக்குமார் மீது புகாரளித்தார். இதையடுத்து தண்டையார்பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் அவர்கள் சட்டத்தைத் தன் கையிலே எடுத்துக்கொண்டு, தி.மு.கழக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்தியிருக்கிறார். கழகம் இதனைச் சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும் என முதல்வர் முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில், தண்டையார்பேட்டை காவல்துறையினர் இன்று இரவு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அதிரடியாக கைது செய்துள்ளனர். அதன்பிறகு, ஜெயக்குமார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டரில், ''திமுக அரசு தன்னுடைய அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முன்னாள்
அமைச்சர் ஜெயக்குமாரைக் கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன். கள்ள ஓட்டு போட்டவர்களை விட்டுவிட்டு அதை தடுக்க முயற்சித்தவரை கைது செய்திருப்பது நகைப்புக்குரியது'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications