ப.சிதம்பரம் அறிவாளி.. ஆனா கொஞ்ச நாளா ஒரு மாதிரி.. அக்னிபாத் விஷயத்தால் பொங்கிய வி.பி.துரைசாமி!
சென்னை : ப.சிதம்பரம் அறிவாளி, சட்ட நிபுணர், ஆனால் சமீபகாலமாக ஒரு மாதிரியாகத்தான் பேசி வருகிறார் என பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில முன்னாள் ராணுவப் பிரிவு சார்பாக, அக்னிபாத் திட்டம் குறித்து தமிழக முழுவதும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தின் தொடக்க விழா பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, சமூக நீதியை இவர்கள்தான் கண்டுபிடித்தது போலவும், சமூகநீதி எனும் வார்த்தைக்கு திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் சொந்தக்காரர்கள் போலவும் நினைக்கின்றனர் என விமர்சித்துள்ளார்.
கச்சத்தீவை பாஜக மீட்கும்.. 'அவரை’ இலங்கைக்கு அனுப்பியதே அதற்காகத்தான்- உறுதியாக சொன்ன விபி துரைசாமி!
வி.பி.துரைசாமி
செய்தியாளர்களிடம் பேசிய வி.பி.துரைசாமி, "பாஜக அரசு அக்னிபாத் என்ற ஒரு அருமையான திட்டத்தை அறிவித்து, முப்படைகளிலும் ஆண்களும், பெண்களும் சேரலாம் என்று அறிவித்துள்ளது. அந்த திட்டத்தில் இளைஞர்கள் சேரவேண்டும் என்றும் இந்திய ராணுவம் வலுவுள்ளதாக, பலமிக்கதாக ஒரு இளமை துடிப்போடு இருக்க வேண்டும் என்றும் இந்த தேசத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதும் தான் பாஜக அரசின் கொள்கையாக உள்ளது.
அக்னிபாத்
அந்தக் கொள்கையை வகுத்து தந்தவர் பிரதமர் மோடி. ஆனால் அந்த கொள்கையை பற்றி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசக்கூடிய வாய்ப்பு இருந்தும் நாடாளுமன்றத்தில் பேசுவதைத் தவிர்த்துவிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாட்டினுடைய சொத்தாக உள்ள ரயில்வே துறைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரயில்களில் தீ வைத்து பயணிகளுக்கு தொந்தரவு செய்வது மட்டுமல்லாமல் தொடர்ந்து இந்த போராட்டங்களை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரித்து வருகின்றன.
தேச நலனில்
அக்னிபாத் திட்டத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை கேட்டுக்கொள்கிறேன். தேசம் இருந்தால்தான் நாம் வாழ முடியும். தேசத்தின் நலன் சார்ந்த விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் ஒரு மாதிரி
அக்னிபாத் திட்டம் குறித்த முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்.பியுமான ப.சிதம்பரத்தின் விமர்சனத்துக்கு பதிலளித்த வி.பிதுரைசாமி, ப.சிதம்பரம் சமீபகாலமாக கொஞ்சநாளாகவே ஒரு மாதிரியாகத்தான் பேசி வருகிறார். அவர் எவ்வளவு பெரிய ஒரு சட்ட நிபுணர். அவருடைய அறிவையும், ஆற்றலையும் பாஜகவில் இருக்கும் ஒருவரும் குறைசொல்ல மாட்டோம். மிகச்சிறந்த வழக்கறிஞர். ஆனால் அவர் இப்படி பேசுவது வருத்தம் அளிக்கிறது. எம்.பி பதவி கொடுத்ததற்காக இப்படி பேசி வருகிறார் எனத் தெரிவித்தார்.
Recommended Video
கி.வீரமணி
டெல்லியில் அதிமுக அடகு வைக்கப்பட்டுள்ளதாக கி.வீரமணி கருத்து தெரிவித்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த வி.பி.துரைசாமி, கி.வீரமணி போன்றவர்கள் எல்லாம் திமுக அரசுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை தருபவர்கள். அதில் ஏதோ சமூக நீதியை இவர்கள்தான் கண்டுபிடித்தது போலவும், சமூகநீதி எனும் வார்த்தைக்கு திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் சொந்தக்காரர்கள் போலவும் நினைக்கின்றனர். இன்று ஜனாதிபதி வேட்பாளராக பாஜகவால் அறிவிக்கப்பட்டுள்ளவர் முதல் பழங்குடியின ஜனாதிபதி ஆகப்போகிறவர். வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறது பாஜக. கி.வீரமணி திமுகவினரிடம், திரௌபதி முர்முக்கு நாம் வாக்களிக்க வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். அப்படி சொல்லியிருந்தால் அவர் கருத்துக்கு நான் பதில் சொல்லியிருப்பேன்." எனத் தெரிவித்துள்ளார்.