அடடே சூப்பர்..! இப்படியொரு பாஜக எம்எல்ஏவா... செருப்புகூட அணியாமல் சட்டசபைக்கு சென்ற காந்தி
சென்னை: எளிமைக்குப் பெயர்போன பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தி, செருப்புகூட அணியாமல் தமிழ்நாடு சட்டசபைக்குச் சென்று கவனத்தை ஈர்த்ததுள்ளார்.
Recommended Video
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தேர்தலில் 20 இடங்களில் பாஜக போட்டியிட்டது.
அதில் கோவை தெற்கு, நாகர்கோவில், திருநெல்வேலி, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வென்றனர். சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபையில் பாஜக உறுப்பினர்கள் நுழைந்துள்ளனர்.
எம் ஆர் காந்தி
இந்த நான்கு பேரில் முக்கியமானவர் நாகர்கோவில் எம்எல்ஏ எம் ஆர் காந்தி. 75 வயதாகும் எம் ஆர் காந்தி சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் கடந்த 1980ஆம் ஆண்டு முதல் 6 முறை தொடர்ந்து சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்தவர். 7ஆவது முறையாக இந்தத் தேர்தலில் போட்டியிட்ட அவர், நாகர்கோவில் தொகுதியில் திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜனைவிட கூடுதலாக 11,669 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
எளிமை
தனது எளிமையான வாழ்க்கை முறைக்குப் பெயர்போனவர் தான் எம் ஆர் காந்தி. பொதுவாகவே இவர் செருப்பு அணியாமல் நடப்பத்தையே பழக்கமாக கொண்டுள்ளார். சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்காக நாகர்கோவில் முழுவதும் பம்பரமாகச் சூழன்று பிரசாரம் செய்தபோதும்கூட அவர் செருப்பை அணியவில்லை. இது அப்போதே சமூக வலைத்தளங்களில் வைரலானது.
செருப்புகூட இல்லை
இந்நிலையில், சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், அங்கும் செருப்பு அணியாமல் சென்று கவனத்தை ஈர்த்துள்ளார் இந்த பாஜக சட்டசபை உறுப்பினர். எளிமையாக இருப்பது மட்டுமின்றி கட்சி பாகுபாடுகளைக் கடந்து, அனைவராலும் நேசிக்கப்படும் ஒரு மனிதராக அறியப்படுபவர் எம் ஆர் காந்தி.
சட்டசபை கூட்டத்தொடர்
தமிழ்நாட்டின் 16ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் (ஜூன் 24) நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.