சபாநாயகர் அப்பாவு கூப்பிட்ட விதம்..நெகிழ்ந்து போய் பாராட்டிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்..செம்ம
சென்னை: தமிழக சட்டசபையில் சபாநாயகராக பொறுப்பேற்ற அப்பாவுவை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வெகுவாக பாராட்டி பேசினார். இருவரும் குடும்ப நண்பர்கள் என்றும் கொள்கையில் மாறுபாடு என்றாலும், பொதுப்பிரச்சனையில் ஒன்றாக குரல் கொடுத்தோம் என்றார்.
சட்டசபையில் சபாநாயகராக அப்பாவு மற்றும் துணை சபாநாயகராக பிச்சாண்டி ஆகியோர் நேற்று பதவியேற்றனர். அதை வரவேற்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று ஒவ்வொருவராக பேசினர்.
கொரோனா காலத்திலும் தஞ்சாவூரில் தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா - ஆலோசனையை கேளுங்க
அப்போது சபாநாயகர் அப்பாவு, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை அழைக்கும் போது, எனது குடும்ப நண்பர் நயினார் நாகேந்திரன் என்று கூறி பேச அழைத்தார்.
குடும்ப நண்பர்கள்
அதற்கு நன்றி தெரிவித்து நயினார் நாகேந்திரன் பேசுகையில், பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. அப்பாவு அவர்கள் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது உங்கள் எல்லோருக்கும் எவ்வளவு மகிழ்ச்சி இருக்கிறதோ அதைவிட எனக்கு பன்மடங்கு மகிழ்ச்சி. சிறுவயதில் இருந்தே என் குடும்பமும், அவரது குடும்பமும் குடும்ப நண்பர்கள். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு எல்லையில் உள்ள வெப்பைக்குடி என்ற குக்கிராமம் தான் அவருடய ஊர். அவர் ஊரில் இருந்து கூப்பிடும் தூரத்தில் என் ஊர் உள்ளது.
வயது வித்தியாசம் உள்ளது
கொள்கையில் நிறைய வேறுபாடுகள் இருந்தாலும், குடும்ப நண்பர்கள். அவர்களும் நானும் படித்த கல்லூரி குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழியில் உள்ள அறிஞர் அண்ணா கல்லூரி. ஒன்றாக படித்தோம் என்று யாரும் நினைக்கக்கூடாது. உருவத்தை பார்த்து எடை போடக்கூடாது. வயதில் வித்தியாசம் இருக்கிறது. நானும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்திரமும் ஒன்றாக பயின்றோம் என்றார்.
சிரித்து பாராட்டிய நாகேந்திரன்
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, அறிஞர் அண்ணா கல்லூரியில் படித்த போது நான் முதல் மாணவன். கல்லூரி ஆரம்பித்த 1969ல் முதல் மாணவன் என்றார். அதை கேட்டு மகிழ்ந்த நயினார் நாகேந்திரன், இப்போது தமிழக சட்டப்பேரவையின் தலைவர் நீங்கள் தான் என்றார். தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், சபாநாயகர் அப்பாவு, படிக்கும் போதே பொதுவாழ்வில் பெரிதும் ஈடுபாடும், ஆர்வமும் கொண்டவர்.
திமுகவிற்கு நன்றி
நானும் அவரும் வேறுவேறு கட்சிகளில் இருந்தாலும், பொதுப்பிரச்சனைகளில் ஒன்றாக குரல் கொடுப்போம். பொதுவிஷயங்களுக்காக போராடுகின்ற ஒரு நல்ல மாமனிதர் இன்று பேரவை தலைவராக வந்துள்ளார் என்று சொல்லும் போது அவரை நான் மனதார உளமாற பாராட்டுகிறேன். இன்றைக்கு அவருடைய இயக்கம் இந்த இடத்தில் அமர்த்தியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
வாய்ப்பு தர வேண்டும்
அதேநேரத்தில் என்னை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுவதற்கு எங்களுடைய அகில இந்திய பாஜக தலைவர் ஜெபி நட்டா அவர்கள், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எனக்கு இந்த வாய்ப்பினை வழங்கி இருக்கிறார்கள். அதற்கு ஆதாரமாக என்னை திருநெல்வேலி மக்கள் 23500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து பணியாற்ற அனுமதித்து உள்ளார்கள், ஆகவே பேரவை தலைவர், திருநெல்வேலி மண்வாசனை போல, நேர்மையும் வீரமும் போல, உங்கள் பணி என்பது, எதிர்க்கட்சி தலைவர் சொன்னது போல், நாணயத்தின் இரண்டு பக்கங்களில் ஒரு பக்கம் கோனினால் ஒரு பக்கம் செல்லாது ஆகிவிடும். ஆகவே எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எத்தனை எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் எண்ணங்களின் அடிப்படையில் உறுப்பினர்களுக்கு அதிக அளவு பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்.