ஆர்எஸ்எஸ்-ஐ வீழ்த்த முடியாது.. நேரு, இந்திரா, ராஜீவ் முயற்சிகளே தோல்வியடைந்தது.. வானதி சீனிவாசன்!
சென்னை: ஆர்எஸ்எஸ் இயக்கத்தை வீழ்த்த முன்னாள் பிரதமர்களான நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மேற்கொண்ட முயற்சிகள் படுதோல்வியில் முடிந்ததை திமுக அரசுக்கு நினைவுபடுத்த விரும்புவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அக். 2ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி தர இயலாது என காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும், மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்.2ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த தமிழக காவல்துறை தடை விதித்துள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையிலான திமுக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
பி.எஃப்.ஐ. காரணம்காட்டி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பதா? தமிழக அரசுக்கு பாஜக கண்டனம்
ஜனநாயக இயக்கம்
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு இந்த ஆண்டுதான் முதல்முறையாக நடப்பது போல சில அரசியல் தலைவர்கள் பேசி வருகின்றனர். நாட்டின் விடுதலைக்கு முன்பிருந்தே தமிழகத்தில், விஜயதசமியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ். அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. ஆர்எஸ்எஸ் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பதிவு செய்யப்பட்டு இயங்கும் ஜனநாயக இயக்கம். 97 ஆண்டுகளை நிறைவு செய்து, 98வது ஆண்டில் ஆர்எஸ்எஸ் அடியெடுத்து வைக்கிறது. 2025ல் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடத் தயாராகி வரும் இயக்கம் ஆர்எஸ்எஸ்
வன்முறை நடந்ததில்லை
அரசியலமைப்பு சட்டப்படி இயங்கும் அமைப்புக்கு, அணிவகுப்பு ஊர்வலம் நடத்த, பொதுக்கூட்டம் நடத்த உரிமை உள்ளது. இந்த அடிப்படை உரிமையைப் பறிப்பது ஜனநாயகத்தை முடக்கும் நடவடிக்கை. 97 ஆண்டுகளாக நடந்து வரும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் எந்த வன்முறையும் நடந்ததில்லை. ஆர்எஸ்எஸ் அரசியல் இயக்கம் அல்ல. சமூக, கலாச்சார, தேசபக்தி இயக்கம். தேசத்திற்காக தானாக முன்வந்து உழைக்கும் தன்னார்வலர்களை உருவாக்கும் அமைப்பு. அதனால் தான் உயர் நீதிமன்றமும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளித்தது.
நேருவின் முயற்சி தோல்வி
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. இதுபோன்ற இடையூறுகள் மூலம் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ்-ன் செயல்பாடுகளை முடக்கி விடலாம் என யாராவது கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும். ஆர்எஸ்எஸ்-ஐ வீழ்த்த முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள் படுதோல்வியில் முடிந்ததை திமுக அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அனுமதி அளிக்க வேண்டும்
எந்த நேரு, ஆர்எஸ்எஸ் இயக்கத்தை எதிர்த்தாரோ அந்த நேருவே, 1963ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் சீருடையுடன் பங்கேற்க அழைப்பு விடுத்தார். வாஜ்பாய், நரேந்திர மோடி ஆகிய இரு பிரதமர்களை தந்த இயக்கம் ஆர்எஸ்எஸ். இத்தகைய பின்னணி கொண்ட ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தமிழக காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.