இவங்க மட்டும் என்ன விதிவிலக்கா?.. இவங்களுக்கும் சலுகை கொடுங்க.. ஸ்டாலினுக்கு, வானதி கோரிக்கை!
சென்னை: 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை போலவே தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கொரோனா பெருந்தொற்றில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சியை எதிர் நோக்கி இருந்த அனைவருக்கும் தேர்ச்சி வழங்க மத்திய அரசு முதலில் அறிவித்தது.
அதை பின் தொடர்ந்து, தமிழக அரசும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி என்று அறிவித்தது. அதை பின் தொடர்ந்து அவர்களின் 10 ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு நடைமுறை தேர்வின் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்பட்டுவிட்டது.
ஆனால் 1,50,000 மாணவர்கள் தனித்தேர்வர்களாக பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் தேர்ச்சி அறிவிக்கப்படவில்லை. அதோடு அவர்களுக்கான தேர்வையும் அக்டோபர் மாதத்தில் அறிவித்திருக்கிறார்கள். அக்டோபரில் தேர்வு பின்னர் நவம்பரில் தேர்ச்சி முடிவுகள் வந்தால் எப்போது அந்த மாணவர்கள் உயர்கல்வியில் சேருவார்கள் என்பதை அரசு பரீசிலிக்க வேண்டும்.
மகா., கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது கவலை தருகிறது: 6 மாநில முதல்வர்கள் கூட்டத்தில் மோடி
அதோடு தனித்தேர்வர்களின் தேர்ச்சிக்கு முறையான மதிப்பீட்டு அணுகுமுறை என்ன என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழக அரசு 10,12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்ச்சியை முன் ௯ட்டியே ஆல்பாஸ் என அறிவித்து இவர்களுக்கும் முறையான மதிப்பெண் வழங்கப்பட்டால் அந்த மாணவர்களும் கல்லூரியில் சேர்வதற்கு வசதியாக இருக்கும். லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்கால நலன் கருதி தமிழக அரசு இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.