“விஜய் கவுன்சிலர் கூட ஆகல.. வேடிக்கை பார்க்க கூட்டம் வரும்.. ஓட்டு வருமா?” - நயினார் நாகேந்திரன்
சென்னை: "தவெக தலைவர் விஜய் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் கூட ஆகவில்லை. புதிதாக கட்சி ஆரம்பித்தால் வேடிக்கை பார்க்க நிறைய பேர் வருவார்கள். தேர்தல் காலத்தில் ஓட்டு எவ்வளவு வாங்குவார் என்பது தான் முக்கியம். இன்று பார்க்க வருபவர்கள் எல்லாம் ஓட்டு போடுவார்கள் என்று சொல்ல முடியாது" என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் இலவச மருத்துவ முகாமை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், "கூட்டணியை மட்டும் பலமாக வைத்து இருந்தால் போதுமா? மக்களுக்கு நல்லது செய்ய வேண்டாமா? திமுக கூட்டணியை அசைப்போம். உறுதியாக ஆட்சி மாற்றம் வரும்.

நயினார் பேட்டி
என்.டி.ஏ கூட்டணியில் எந்தச் சிக்கலும் இல்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி வலுப்பெறும். திமுக தொடர்ந்து இரு முறை ஆட்சி அமைத்த வரலாறு இல்லை. எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம். எங்களுடைய கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் நல்லாட்சி மலரும்.
விஜய் கவுன்சிலர் கூட ஆகவில்லை
விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்து பிரசாரத்தை ஆரம்பித்து இருக்கிறார். அவருடைய நோக்கமும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்றுவது தான். தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் கூட ஆகவில்லை. ஒரு எம்எல்ஏ கூட கிடையாது. இப்போது தான் கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள்.
வேடிக்கை பார்க்க கூட்டம் வரும்
எங்களை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை அவருக்கு இல்லை என்று நான் நினைக்கிறேன். புதிதாக கட்சி ஆரம்பித்தால் வேடிக்கை பார்க்க நிறைய பேர் வருவார்கள். தேர்தல் காலத்தில் ஓட்டு எவ்வளவு வாங்குவார் என்பது தான் முக்கியம். இன்று பார்க்க வருபவர்கள் எல்லாம் ஓட்டு போடுவார்கள் என்று சொல்ல முடியாது" என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
விஜய் பிரச்சாரம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது முதல் பிரச்சாரப் பயணத்தை திருச்சியில் இன்று தொடங்கினார். சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த அவரை வரவேற்க, விமான நிலையம் முதல் காந்தி மார்க்கெட் மரக்கடை வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காலை 10:35 மணியளவில் மரக்கடை பகுதியில் விஜய்க்குப் பேச நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் பகுதிக்குச் செல்வதற்கே சுமார் ஐந்து மணி நேரத்துக்கும் மேலானது. தொண்டர்கள் நடந்து சென்று பிரச்சார வாகனத்தைப் பின்தொடர்ந்த நிலையில், அவரது வாகனம் மெதுவாக நகர்ந்து வந்து, பிரச்சார இடத்தை அடைந்தது.
திருச்சியில் விஜய்
பின்னர் பிரச்சார வாகனத்தின் மீது ஏறி விஜய் பேசுகையில், "அந்தக் காலத்தில் குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டுதான் போருக்கு செல்வார்கள். அதுபோலதான் அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலுக்கு திருச்சியில், இங்கே இப்போது பணியை தொடங்குகிறேன். எம்ஜிஆர் முதல் மாநில மாநாடு நடத்திய இடம் திருச்சி, அறிஞர் அண்ணர் அரசியலில் களமாட விரும்பிய இடம் திருச்சி, பெரியாரும், அண்ணாவும், எம்ஜிஆரும் நேசித்த இடம் திருச்சி. மதச்சார்பின்மைக்கு பெயர் பெற்றது திருச்சி மண். திருச்சியில் தொடங்கிய அனைத்துமே திருப்பு முனையாக அமையும் என்று சொல்வார்கள். திருச்சிக்கென்று சிறப்பு வரலாறு உள்ளது.
டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாணவர்கள் கல்விக் கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அரசுப் பணியில் 2 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது? நாம் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். திமுகவினரிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை.
நோ காம்ப்ரமைஸ் - விஜய்
திமுகவை சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ஓசி, ஓசி என சொல்லிக் காட்டுகிறார்கள். எல்லோருக்கும் 1,000 ரூபாய் தருவதில்லை, கொடுத்த சிலருக்கும் சொல்லிக் காட்டுகிறார்கள், அசிங்கப்படுத்துகிறார்கள். உதவி செய்துவிட்டு சொல்லி காட்டுவதற்கு உதவி செய்யாமலேயே இருந்திருக்கலாம்.
மின்சாரம், மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்துகொடுக்கும். பெண்கள் பாதுகாப்பில், சட்ட பிரச்சனைகளில் No Compromise. நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம். வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு? திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? சொன்னீர்களே, செய்தீர்களா?" என்று விஜய் பேசினார்.












Click it and Unblock the Notifications