போன பின் பார்ப்போம் என அலட்சியம்..? கேரளா அரசின் துரோகம்.. “தட்டிக் கேளுங்க” - கொந்தளிக்கும் பாஜக!
சென்னை : தமிழக - கேரள எல்லையில் அத்து மீறி செயல்படும் கேரள அரசை கண்டித்து, ரீசர்வே பணியினை நிறுத்தச் சொல்லி அழுத்தம் கொடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தியுள்ளது தமிழக பாஜக.
கேரளா அரசு, டிஜிட்டல் மறு அளவீடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மாநில எல்லைப் பகுதியில் பல்வேறு இடங்களில் கேரள அரசு தமிழக நிலங்களை கேரளாவிற்கு சொந்தமானது என பதிவு செய்து பலகைகள் வைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக எல்லைப் பகுதியைச் சேர்ந்தவர்கள், வன ஆர்வலர்கள், விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கேரள மாநில அரசு எடுக்கும் இந்த டிஜிட்டல் ரீ சர்வேயால் தமிழகத்தை ஒட்டியுள்ள தமிழகத்தின் நிலங்கள் பறிபோகும் அபாயம் உள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

கேரளா டிஜிட்டல் ரீசர்வே
கேரள மாநில அரசு கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் டிஜிட்டல் ரீசர்வே பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றம், நிலவரையறை, இடங்களை வகைப்படுத்துதல் ஆகியவற்றுக்காக இப்பணிகளை மேற்கொள்வதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ரீ சர்வே பணிகளில் 1500 சர்வேயர்கள், 3200 உதவியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணிகளை 4 ஆண்டுகளுக்குள் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக - கேரள எல்லை
மறு அளவீடு செய்ய வேண்டுமானால் முதலில் தமிழக - கேரள எல்லையை அளவிட வேண்டும். அதனை செய்யாமல் வருவாய் நிலங்களை கேரள அரசு டிஜிட்டல் ரீசர்வே செய்வதால் தமிழகத்தில் 1400 சதுர கி.மீ வனத் தோட்ட பகுதிகளை இழக்கும் நிலை ஏற்படும் என தமிழக - கேரள எல்லைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். கேரளா உருவானபோது எல்லை மறுவரையை முறையாகச் செய்யாததால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை அருகே உள்ள தமிழக வனப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

தமிழக அமைச்சர்
இது போன்று எல்லைப்பகுதி நிலங்களில் குளறுபடிகள் நடப்பதால் தமிழக அரசு விழிப்புடன் இருந்து நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என விவசாயிகள் மற்றும் வனவியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்தார். தமிழக, கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் கேரள அரசு ரீசர்வே தொடங்கும் முன், இரு மாநில எல்லைகள் தொடர்பான நில அளவை மற்றும் இதர ஆவணங்களுடன் கூட்டு ஆலோசனைக்குழு கூட்டம் தமிழக கேரள எல்லைகளைச் சேர்ந்த அலுவலர்கள் முன்னிலையில் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

பாஜக கண்டனம்
இந்நிலையில், மாநில எல்லை பிரச்சனை தொடர்பாக தமிழக வருவாய்த்துறை அமைச்சரின் கருத்து, 'போன பின் பார்ப்போம்' என்று அலட்சியமாக நடந்து கொள்வதாக இருக்கிறது என பாஜக கண்டித்துள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழக கேரள எல்லைகளை மறு அளவீடு செய்வதாக கேரள அரசு தன்னிச்சையாக செயல்பட்டு தமிழக நிலங்களை தங்களின் வருவாய் நிலங்கள் என ஆக்கிரமித்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

போன பின் பார்ப்போம்?
குறிப்பாக தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் பல நிலங்களில் வலுக்கட்டாயமாக, 'இது கேரள மாநிலத்திற்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகையை வைத்துச் செல்வது நில ஆக்கிரமிப்பின் உச்சகட்டம். பல லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலங்களை கேரள கம்யூனிஸ்ட் அரசு அத்துமீறி வளைத்துப் போட முயற்சி செய்வதை தமிழக அரசு கண்டிக்காமல் அமைதி காப்பது முறையல்ல. இது குறித்து நேற்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விரைவில் இரு மாநில அரசுகளும் இணைந்து மறு ஆய்வு நடத்தும் என்றும் கூறியுள்ளது நகைப்புக்குரியதாக உள்ளது. 'வரும் முன் காப்போம்' என்றவர்கள் 'போன பின் பார்ப்போம்' என்று அலட்சியமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.

கம்யூனிஸ்ட் அரசின் துரோகம்
உடனடியாக தமிழக எல்லையில் அத்து மீறி செயல்படும் கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்து, மறு ஆய்வு பணியினை நிறுத்தச் சொல்லி அழுத்தம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. கம்யூனிஸ்டுகளுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருந்த திமுக அரசு இப்போதாவது விழித்துக் கொண்டு தமிழர்களுக்கு கேரள கம்யூனிஸ்ட் அரசு செய்யும் துரோகத்தை தட்டிக் கேட்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications