கை நழுவிப் போன ரஜினி.. மனம் தளராத பாஜக.. சசிகலாவை வைத்து அடுத்த ஆட்டத்துக்கும் ரெடி?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு குட்பை சொல்லிவிட்டதாலே பாஜகவின் அரசியல் ஆட்டம் ஓய்ந்துவிடப் போவதில்லை. பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலாவை முன்வைத்து அதிமுகவை கட்டுப்பாட்டில் கொண்டுவர அடுத்த ஆட்டத்தை பாஜக தொடங்கும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
தமிழகத்தில் இந்துத்துவா சித்தாந்தம் பேசி கால்வைக்க முடியாது என்பது பாஜகவுக்கு புரிந்து போன ஒன்று. தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை நெருங்க வேண்டுமானால் அதிமுகவை கபளீகரம் செய்வதைத்தவிர வேறுவழியே இல்லை பாஜகவுக்கு என்பதுதான் யதார்த்தம்.
ரஜினிகாந்தை அரசியலுக்கு வர வைப்பது அதிமுகவிடம் சரிபாதி தொகுதிகளை பெற்று பீகார் பாணியில் வெல்லலாம் என நினைத்த பாஜகவின் நினைப்பில் மண் அள்ளி போடப்பட்டுவிட்டது. ரஜினிகாந்த், அரசியலுக்கே வரவில்லை என குட்பை சொல்லிவிட்டார். இதற்காக பாஜக ஒன்றும் மனம்தளர்ந்துவிடப் போவதும் இல்லை.
மெக்சிகோவில்... பைசர் தடுப்பூசி போட்ட டாக்டருக்கு உடல்நலக்குறைவு...மருத்துவமனையில் அனுமதி!
22 நாட்களில் விடுதலை
அதிமுகவை ஆக்கிரமிக்க அடுத்த அஸ்திரத்தை ஏவ எந்த எல்லைக்கும் பாஜக தயாராகவே இருக்கும். பாஜகவின் கையில் இருக்கும் தற்போதைய ஒற்றை துருப்புச் சீட்டு சசிகலா. இன்னும் 22 நாட்களில் பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலா, தமிழக அரசியலில் என்னமாதிரியான கேம் ஆடுவார் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது.
சசிகலாவின் மூவ் என்ன?
தாம் முதல்வராவதை தடுத்து சிறைக்கு அனுப்பிய பாரதிய ஜனதா கட்சியை பழிதீர்க்கும் வகையில் வியூகம் அமைப்பாரா? அல்லது இருக்கின்ற பல்லாயிரம் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளை காப்பாற்றிக் கொள்ள பட்டவரை போதும் என பாஜகவுக்கு பச்சைக்கொடி காட்டுவாரா? என்கிற கேள்வி எழவே செய்கிறது. சசிகலா முன் உள்ள வாய்ப்புகள் எனில் தினகரனின் அமமுகவின் தலைவராக பதவியேற்றுக் கொண்டு அமைதியாக அரசியல் செய்வது என்பது ஒருவாய்ப்பு.
அதிமுகவுக்கு குறி
இன்னொன்று அதிமுக அரசாங்கத்துக்கு குடைச்சல் கொடுப்பது. அதிமுக ஆட்சிக் காலம் முடிவடையும் நிலையில் இருப்பதால் இதில் சசிகலா கவனம் செலுத்த வாய்ப்பு குறைவு. அதேநேரத்தில் 30 ஆண்டுகாலம் தமது கட்டுப்பாட்டில் இருந்த அதிமுகவை அவ்வளவு எளிதாகவெல்லாம் சசிகலா விட்டுவிட மாட்டார் என்றே தெரிகிறது. அதிமுகவை தன்வசமாக்க அத்தனை வியூகங்களையும் சசிகலா கையில் எடுப்பார்; தேவைப்பட்டால் பாஜகவின் உதவியையும் கூட நாடவும் அவர் தயங்கமாட்டார் என தெரிகிறது.
ஓபிஎஸ்-சசிகலா ஓரணி?
சசிகலாவின் வருகையை அதிமுகவின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு விரும்பாமல் போனால் அந்த கட்சி பிளவுபடக் கூடிய சாத்தியங்களும் இருக்கிறது. பாஜகவின் ஆதரவுடன் சசிகலா இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டால் இந்த முறை சசிகலா பக்கம் ஓபிஎஸ் நிற்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஓபிஎஸ்ஸை பொறுத்தவரையில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை அந்த கட்சிக்கு அனுசரணையாக மட்டுமே நடந்து கொள்வார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
ஈபிஎஸ் தரப்பு என்ன செய்யும்?
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு சசிகலாவை ஏற்றுக் கொண்டு அவருக்கு என அதிமுகவில் ஒரு இடம் தரப்போகிறதா? அல்லது அவருக்கு எதிரான தர்ம யுத்தத்துக்கு இம்முறை எடப்பாடியார் தலைமை வகிக்கப் போகிறாரா? பாஜகவை எதிர்த்ததால்தான் அதிமுகவை உடைத்தார்கள் என தமிழகத்தின் குரலாக எடப்பாடி பேசுவாரா? என்கிற பல கேள்விகள் சசிகலாவின் விடுதலையை முன்வைத்து காத்திருக்கின்றன. இன்னும் 22 நாட்களில் தமிழகத்தை தாக்கப் போகும் பெரும் அரசியல் புயல் ஒன்று இப்போதைக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் மையம் கொண்டிருக்கிறது என்பதுமட்டும் உறுதி.