கூட்டணியை உருவாக்க முடியாமல் திணறும் "தாமரை".. மோடி வந்து போனதும் ட்விஸ்ட்! 2 நாளில் சம்பவம் இருக்கு
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான பணிகளை திமுக தொடங்கி உள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாஜக தமிழ்நாட்டில் இன்னும் கூட்டணியை அறிவிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் 2 நாட்களில் பாஜக மேஜர் அறிவிப்பு ஒன்றை வெளியிட போவதாக தகவல்கள் வருகின்றன.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் திமுக - காங்கிரஸ் இடையிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பின் இந்த மாத தொடக்கத்தில் கூட்டணி கட்சியில் உள்ள மற்ற கட்சிகளுடன் திமுக ஆலோசனை நடத்தியது. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளுடன் திமுக கூட்டணி குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

திமுக அடித்து ஆடுது: அதன்படி இந்த முறையும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக , விடுதலை சிறுத்தைகள், இன்னும் சில உதிரி கட்சிகள் உடன் திமுக கூட்டணி வைக்க உள்ளது. ஏற்கனவே திமுக திமுக 2 தொகுதிகளின் பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சி சார்பாக மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாஜக திணறல்: ஆனால் மத்தியில் ஆளும் பாஜக தமிழ்நாட்டில் இன்னும் கூட்டணியை அறிவிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது.
2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்ய மார்ச் வரை மட்டுமே கால அவகாசம் என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டு இருந்ததாம். மோடி வருவதற்கு முன் கூட்டணியை இறுதி செய்ய வேண்டும்.. நீங்கள் நடைப்பயணம் செய்தது போதும்.. உடனே கூட்டணியை முடிவிற்கு கொண்டு வாருங்கள்.
கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிங்க. 3வது அணி உருவாவதை உறுதி செய்யுங்கள் என்று அண்ணாமலைக்கு டெல்லி பாஜக உத்தரவிட்டு இருந்ததாம். ஆனால் பாஜகவால் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை. கூட்டணி தலைவர்களை மோடி இருக்கும் மேடையில் ஏற்றுவேன் என்று அண்ணாமலை கொடுத்த வாக்கையும் காப்பாற்ற முடியவில்லை.
பாஜக கூட்டணி இல்லை: அதிமுக கூட்டணிக்கு பாமக, தேமுதிக செல்வதாக தகவல்கள் வருவதால்.. பாஜக கூட்டணிக்கு ஆள் வராத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது இரண்டு கட்சிகளும் பாஜக கூட்டணிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிமுக கூட்டணிக்கு வர திட்டமிட்டு உள்ளன.
ஒரு பக்கம் சிறிய கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் (TMC) பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. 1999ல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியை கவிழ்ப்பதில் அவரது தந்தை மூப்பனார் முக்கிய பங்கு வகித்தார். தற்போது அவர் மகனே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். அதே சமயம் தமிழ் மாநில காங்கிரசுக்கு வெறும் 0.5 சதவிகிதம் மட்டுமே வாக்கு உள்ளது. இது போக பாரிவேந்திரன் ஐஜேகே போன்ற சிறிய கட்சிகள் மட்டுமே பாஜக கூட்டணிக்கு வந்துள்ளன.
மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க முடியாதது, அதிமுக உடனான கூட்டணியை காப்பாற்ற முடியாமல் போனது ஆகியவை அண்ணாமலையின் இயலாமை, அவரது தலைமை பண்பில் இருக்கும் குறைபாடு ஆகியவற்றைத்தான் காட்டுகிறது. பெரிய கட்சிகள் இறங்கி வராததால் பாஜகவிற்கு சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட அண்ணாமலையை சுற்றி எல்லா பக்கமும் தற்போது கூட்டணி கன்னிவெடிகளாகவே இருக்கின்றன.
2 நாட்களில் அறிவிப்பு: இந்த நிலையில்தான் நேற்று மோடி வந்துவிட்டு சென்ற நிலையில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க சில ஆலோசனைகளை வழங்கிவிட்டு சென்று இருக்கிறாராம். யாரை எல்லாம் அணுக வேண்டும், எங்கே பேச வேண்டும் என்று சில ஆலோசனைகளை வழங்கிவிட்டு சென்று இருக்கிறாராம்.
இதையடுத்து 2 நாட்களில் பாஜக கூட்டணி பற்றிய முடிவு இறுதியாகும் என்கிறார்கள். அதன்படி இன்னும் இரண்டு நாட்களில் பாஜக தலைமையிடம் இருந்து கூட்டணி குறித்து நல்ல செய்தி வரும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி அளித்துள்ளார். முக்கிய சில கட்சிகளை இணைத்துக்கொண்டு கூட்டணி பற்றிய அறிவிப்பை பாஜக வெளியிடும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications