அண்ணே! சசிகலாவை சேர்க்க வேண்டாம்...ஓ.பி.எஸ். ஊசலாட்டத்தை தகர்த்த ஈ.பி.எஸ்? டெல்லி விசிட்டின் பின்னணி
சென்னை: சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவே வேண்டாம்; நமக்குதான் மீண்டும் பிரச்சனைவரும் என ஓ. பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தி டெல்லிக்கு அழைத்துச் சென்றார் எடப்பாடி பழனிசாமி என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
அதிமுகவில் தொடர்ந்து நம்பர் 2தான் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார் ஓ. பன்னீர்செல்வம். இதனால் சசிகலாவுடன் இணைந்து அதிமுகவில் தமது செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவும் ஓ. பன்னீர்செல்வம் தயங்கவில்லை. ஓ. பன்னீர்செல்வத்துடனும் சசிகலா தொலைபேசியில் பேசுகிறார் என்றெல்லாம் செய்திகள் உலா வருகின்றன.
இன்னொரு பக்கம், சசிகலாவே வேண்டாம்; மீண்டும் அந்த குடும்பத்தின் பிடியில் சிக்கிவிடக் கூடாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். இருந்தபோதும் சசிகலா அனைத்து முனைகளிலும் கொடுத்து வரும் குடைச்சல்களால் அதிமுகவில் குழப்பம் தொடர்ந்து வருகிறது.

முதல் முறை ஒருசேர சந்திப்பு
இந்த நிலையில் டெல்லியில் முதல் முறையாக ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். இருவரையும் பிரதமர் மோடி ஒருசேர சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். பொதுவாக ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். இருவரையும் தனித்தனியே இதுவரை சந்தித்து பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. இப்போது புதிய பாணியாக ஒருசேர அழைத்திருப்பது ஏன் என்பது குறித்து அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம்.

சசிகலாவுக்கு பாஜக உதவி?
அப்போது, சசிகலா அதிமுகவை கைப்பற்றுவதற்கு பா.ஜ.க. மறைமுகமாக உதவி வருவதாகவே தெரிகிறது. தேர்தல் ஆணையம் வழக்கு, சிட்டி சிவில் கோர்ட் வழக்கு என அனைத்திலும் சசிகலாவுக்கு டெல்லி மேலிடம் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாகவே தெரிகிறது. இதை எல்லாம் உணர்ந்துதான் சசிகலாவுக்கு எதிரான வாய்ஸ் அதிமுகவில் சற்றே அடங்கி இருக்கிறது.

டெல்லிக்கு போய் எதிர்ப்பு
ஆனாலும் ஒரு முயற்சியாக, சசிகலாவை ஆதரிக்க வேண்டாம் என டெல்லியிடம் சொல்லித்தான் பார்ப்பது என முதல் முயற்சி எடுத்தது எடப்பாடி பழனிசாமிதானாம். அவர்தான் ஓ.பி.எஸ்ஸையும் தொடர்பு கொண்டு, என்ன இருந்தாலும் நாம் இரண்டு பேரும் கட்சியில் அதிகாரத்தை வைத்திருக்கிறோம். சசிகலா வந்தா நாம் எப்படி இருப்போம்னு நினைச்சு பாருங்க.. எத்தனை பிரச்சனை இருந்தாலும் நாம பேசி தீர்த்துக் கொள்கிறோம்.. அவங்க வந்தா?

ஓகே சொன்ன ஓபிஎஸ்
நிச்சயம் சசிகலா குடும்பத்தின் சொத்தாகவே அதிமுக போய்விடும். அப்படி ஒரு நிலைமை நமக்கு தேவையா? வருத்தத்தில் எந்த முடிவும் எடுக்காதீங்க அண்ணே.. எதிர்காலத்தை பற்றி யோசித்து முடிவெடுங்க.. இது தொடர்பாக டெல்லிக்கு இரண்டு பேரும் சேர்ந்து போய் பேசுவோம் என அழைத்திருக்கிறார். சசிகலா ஆதரவு மனநிலையில் இருந்த ஓ.பி.எஸ் சற்றே ஊசலாட்டத்துடன் டெல்லி பயணத்துக்கு வர எடப்பாடியிடம் ஒப்புதல் சொன்னாராம்.

சசிகலா ஆதரவு மனநிலையில் டெல்லி
ஓபிஎஸ்-ன் ஒப்புதலைப் பெற்ற உடனேயே டெல்லியில் சந்திப்புகளுக்கான நேரத்தை கேட்டு ஏற்பாடுகள் செய்துவிட்டாராம் எடப்பாடி. டெல்லியிலும் தாங்கள் நினைத்தது போலவே சசிகலா ஆதரவு மனநிலைதான் இருப்பது கண்டு நொந்து போய்விட்டார்களாம் இருவரும். அதனால் கூடுமானவரை சசிகலா வேண்டாம் என முடிந்த அளவுக்கு இருவரும் வலியுறுத்திவிட்டு வந்தார்களாம். இருந்தபோதும் டெல்லி மேலிடம் இருவருக்கும் பாசிட்டிவ்வான பதில் சொல்லாமல் போனதால் அப்செட்டுடன் திரும்பி இருக்கிறார்கள் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications