பூஸ்ட் தந்த 30% ரிப்போர்ட்! விஜய்யை சுற்றி வளைக்கிறதா திமுக, பாஜக? தவெக ஆஃபரை தட்டி கழித்த கட்சிகள்?
சென்னை: தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் சந்திக்கவிருக்கும் முதல் தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பும், ஆர்வமும் நிலவுகிறது... எனினும் தற்போதைய சூழலில் தவெக தேர்தல் களத்தில் தனித்து விடப்படுகிறதா என்ற கேள்வி அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கு சில காரணங்களும் உள்ளன. அவைகளைப் பார்ப்போம்.
கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்பதுதான் விஜய்யின் முதல் அரசியல் அதிரடி அறிவிப்பாக இருந்தது. தேர்தல் சமயத்தில், விஜய் இப்படி சொன்னது, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்பட்டது.

திமுக, அதிமுக
காரணம், நீண்டகாலமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகள் தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்க முன்வராத நிலையில் விஜய்யின் இந்த அறிவிப்பு பல சிறிய கட்சிகளைக் கவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த கவர்ச்சிகரமான அறிவிப்புக்கு பிறகும் இதுவரை எந்தவொரு பெரிய கட்சியும் தவெகவுடன் கூட்டணி சேர வெளிப்படையாக முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து தவெகவுடன் ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
ராகுல் காந்தி - விஜய்
ராகுல் காந்தி மற்றும் விஜய்க்கு இடையே தொலைபேசி வாயிலாகவும் தவெக தரப்பில் தொகுதிப் பங்கீடுகள் குறித்து விரிவான வாக்குறுதிகள் அளிக்கப்படதாகச் செய்திகள் கசியத்தான் செய்தது. ஆனாலும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை "இந்தியா" கூட்டணியின் ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு திமுகவுடனான உறவைத் தொடரவே விரும்புவதாகத் தெரிகிறது.
மற்றொரு புறம் மத்திய ஆளும் கட்சியான பாஜகவின் தலையீடும் தவெகவின் கூட்டணி முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
பாஜக தரும் அழுத்தம்?
விஜய்யின் "ஜனநாயகன்" பட வெளியீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் அரசியல் நகர்வுகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதை தவிர்க்குமாறும் அவ்வாறு மீறினால் தனித்து போட்டியிடுமாறும் தவெகவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதன் காரணமாகவே சமீபகாலமாக விஜய் தனது பேச்சுகளில் மத்திய அரசு மீதான விமர்சனங்களைக் குறைத்துக் கொண்டு மாநிலக் கட்சிகளை அதிகம் விமர்சிப்பதாக கருதப்படுகிறது.
தேமுதிக போல் தனித்து போட்டி?
தமிழக அரசியலில் பழைய கட்சிகள் திமுக, அ.தி.மு.க. மட்டுமல்ல, நாம் தமிழர் கட்சி, பாமக, பாஜக போன்ற கட்சிகளும் வலுவான வாக்கு ஆதரவு, திட்டங்கள், பேரணி அமைப்புகளை கொண்டுள்ளன. இந்நிலையில், புதிய கட்சி தவெக தனது தனித்த குரலை கொண்டு, வாக்குகளை ஈர்க்க முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது.
தவெக அரசு அதிகாரத்தில் பங்கு பெறும் வாய்ப்பையும், வாக்குகளை அதிகரிக்கும் திட்டங்களையும் முன்வைத்துள்ளது. ஆனால் பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டங்களில் இதற்காக பெரிய ஆதரவு கிடைத்ததாக தெரியவில்லை. இதனால் கட்சி தனது வாக்குகளை மேம்படுத்துவதற்கான முயற்சியில் இருக்கிறது.
பூஸ்ட் தந்த கருத்துக்கணிப்பு
குறிப்பாக, சில கருத்துக் கணிப்புகளில் தவெக 18% வரை வாக்குகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. அதே சமயம், தவெக சொந்த சர்வேக்களில் 30% வரை வாக்குகளை அடையலாம் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. ஆனால் பழைய கட்சிகளுக்கு எதிராக புதிய கட்சி வாக்குகளை எவ்வளவு ஈர்க்கும் என்பது மக்களின் முடிவில் தான் இருக்கும்.
தவெக தற்போது புறக்கணிப்பு, கூட்டணி பிரச்சினைகள், வாக்கு ஆதரவு சவால்கள் போன்றவற்றால் சிரமத்தில் உள்ளது. புதிய கட்சி எனும் வகையில், பொதுமக்களை ஈர்க்கும் திறன், தேர்தல் களத்தில் காட்சியளிக்கும் திறன் இன்னும் நிரூபிக்கப்பட வேண்டியுள்ளது.
விஜய் தனித்து போட்டி?
அந்தவகையில், தற்போதைய நிலையில் எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வராத பட்சத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் தனது தேமுதிக கட்சியைத் தொடங்கியபோது மேற்கொண்ட முடிவைப் போலவே விஜய்யும் தனித்துப் போட்டியிடத் தயாராகி வருவதாக தெரிகிறது. இப்படி தனித்துப் போட்டியிடுவதன் மூலம் தனது பலத்தை நிரூபித்து எதிர்காலத்தில் ஒரு வலிமையான சக்தியாக உருவெடுக்க விஜய் திட்டமிடுகிறாரா என்றும் தெரியவில்லை.
தனித்து நிற்பது கட்சியின் தனித்துவத்தையும் நேர்மையையும் மக்கள் மத்தியில் உயர்த்திப் பிடிக்கும் அதே வேளையில், அனுபவம் வாய்ந்த தலைவர்களின் வாக்கு வங்கியைத் தவிர்ப்பது வெற்றிக்கான இலக்கை எட்ட முடியாத தூரத்திற்கு தள்ளிவிடக்கூடும்.
சிதறடிக்கும் ஓட்டுகள்
இப்படித்தான் தேமுதிக போன்ற கட்சிகள் ஆரம்பத்தில் பெரும் அலையை அன்றைய காலங்களில் உருவாக்கினாலும், சரியான கூட்டணி கணக்குகள் இல்லாதபோது வாக்குச் சிதறலால் வெற்றியை நழுவவிட்டன. தவெகவும் அப்படியொரு வாக்குச் சிதறல் என்ற காரணியாக மாறிவிடுமோ? என்ற சந்தேகமும் பரவலாக எழுகிறது. இந்த வாக்கு சிதறலுக்கு விஜய்யே வழிவகுத்து, எதிரணிக்கு சாதகமாக முடியவும் வாய்ப்புள்ளது. விஜய் யோசிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications