டிஜிட்டல் நூலகம்.. சபாஷ்! ஆனா.. மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத பட்ஜெட் : விஜயகாந்த்
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டை விமர்சித்துள்ளார் விஜயகாந்த்.
சென்னை : மத்திய பட்ஜெட், பல தரப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத ஒரு பட்ஜெட்டாகவே பார்க்கப்படுகிறது. மத்திய பட்ஜெட் வெறும் சடங்காக இல்லாமல், ஆக்கப்பூர்வமான பட்ஜெட்டாக அமைய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்த பட்ஜெட் பற்றி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
கல்வி, சுகாதார நிதி பத்தல.. வருமான வரி வரம்பு, சிகரெட் வரி உயர்வு சூப்பர் - பட்ஜெட் பற்றி அன்புமணி
மகிழ்ச்சி - விஜயகாந்த்
இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023 - 24 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் அடுத்த 3 ஆண்டுகளில் இலக்கு நிர்ணயித்து பழங்குடியினருக்கு திறன் மேம்படுத்தும் பயிற்சி வழங்க ஏதுவாக ரூ.115 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை வரவேற்கிறேன். ரயில்வே திட்டங்களை செயல்படுத்த 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியும், கால்நடைகள் மற்றும் மீன்வளத் துறைக்கு ரூ.20 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தேமுதிக வரவேற்பு
நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக 10 ஆயிரம் கோடியும், விவசாயத்துறை மூலம் ரூ.20 லட்சம் கோடியும் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதையும் வரவேற்கிறேன். நாடு முழுவதும் குழந்தைகள், சிறார்கள், இளையோர் பயன்பெறும் வகையில் டிஜிட்டல் நூலகம் தொடங்கப்படும், பெண்களின் பெயரில் இரண்டு ஆண்டுகள் சேமிப்பு செய்யும் வகையில் 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் தேமுதிக வரவேற்கிறது.
மீனவர்கள் அச்சமின்றி
அதே சமயம் மீன்வளத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில், ஒவ்வொரு நாட்டிற்கும் இடையே எல்லைகள் உள்ளதுபோல், கடலில் எல்லைகளை வரையறுத்து, எல்லை தாண்டுவதாக கூறி மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து, அவர்கள் அச்சமின்றி தொழில் செய்ய வழிவகை செய்ய வேண்டும். நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ஒதக்கப்பட்டுள்ள 10,000 கோடியில் குண்டு குழியுமாக உள்ள சாலைகளை உலகத்தரம் வாய்ந்த சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எங்கே?
விவசாய துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.20 லட்சம் கோடியில், விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில் அவர்கள் விளைவிக்கும் உணவு பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். இயற்கை சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். பதப்படுத்தப்படும் அறைகளையும், தானியங்களை பாதுகாக்க குடோன்களை அமைக்க வேண்டும். மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, இந்தியாவில் டாஸ்மாக் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு, நதிநீர் இணைப்பு, தனிநபர் வருமானத்தை மேலும் உயர்த்துவது, போன்ற அறிவிப்புகள் இடம்பெறாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.
எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத பட்ஜெட்
ஒவ்வொரு தனி விவசாயிக்கும் ஆண்டு வருமானத்தை உயர்த்துவது, நெசவு தொழிலுக்கான புதிய அறிவிப்புகள் இடம்பெறாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. பல்வேறு தரப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத ஒரு பட்ஜெட்டாகவே இது பார்க்கப்படுகிறது. இந்த வருடாந்திர பட்ஜெட், வெறும் சடங்காக இல்லாமல், அறிவிப்பு பட்ஜெட் ஆக்கப்பூர்வமான பட்ஜெட்டாக அமைய வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.