குறுக்கே வந்த 'மாண்டஸ்' புயல்.. 6 மாவட்டங்களில் பேருந்துகள் ரத்து.. விமானங்களும் ரத்து.. முழு விவரம்
சென்னை: மாண்டஸ் புயல் இன்று மாலை மாமல்லபுரத்தில் கரையை கடக்க உள்ள நிலையில், பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் சென்னையில் 7 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல 6 மாவட்டங்களுக்கு பேருந்து சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புயல் சென்னையை நெருங்கி வருவதால் மழை தீவிரமடைய தொடங்கி இருக்கிறது. இன்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் புதுச்சேரிக்கும் இடையே மாண்டஸ் புயல் கரையை கடக்க இருக்கிறது.
இதன் காரணமாக மணிக்கு 75-85 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என்றும் குறிப்பாக கடற்கரைக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு.. மாண்டஸ் புயலால் சென்னையில் என்ன நடக்கும்? வெதர்மேன் முக்கிய வார்னிங்
நிலை
தென்மேற்கு மற்றும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 7ம் தேதி இரவு புயலாக வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்தது. இந்நிலையில் தற்போது இது அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்று சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கில் 200 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது மணிக்கு 12 கி.மீ வேகத்தில் மெல்ல வடமேற்கு நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிதீவிர சூறாவளி என்கிற நிலையிலிருந்து வலுவிழந்து சூறாவளி புயலாக இன்று இரவு ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தாமதமும் ரத்தும்
இதனையடுத்து காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் என 6 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்திருக்கிறது. அதேபோல விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது சென்னையிலிருந்து சிங்கப்பூர், டாக்கா, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கான விமான சேவையில் நேற்று தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னையிலிருந்து தூத்துக்குடி, கொழும்பு, கடப்பா, ஷீரடி மற்றும் மும்பை செல்லும் விமானங்கள் அங்கிருந்து சென்னை திரும்பும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் மேலும் தீவிரமடையும் நிலையில் இன்னும் சில விமான சேவைகள் ரத்து செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.
இன்று காலை நிலவரம்
இன்று காலை 8 மணி நிலவரப்படி அதிதீவிர சூறாவளி புயலாக இருந்த மாண்டஸ் தற்போது வலுவிழந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில், ராமேஸ்வரம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் பலத்த காற்றின் காரணமாக சேதமடைந்துள்ளன. மேலும், கோட்டகுப்பம் பகுதியில் கடற்கரையையொட்டியிருந்த வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. மறுபுறம் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை நீடித்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட்
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்டை கொடுத்திருக்கிறது. சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்படாவிட்டாலும் நேற்றிரவு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சென்னை , திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.