அரசு ஊழியர்களுக்கு நிம்மதி.. சொத்து விவரங்களில் தமிழக அரசு தந்த விளக்கம்.. என்னன்னு பாருங்க
சென்னை: அரசு ஊழியர்களின் சொத்து பட்டியல்களை இணையதளத்தில் வெளியிடுவது என்பது கொள்கை முடிவுற்கு உட்பட்டது என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், அரசு துறைகளில் ஊழலை தடுக்கும் விதமாக அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை ஆண்டு தோறும் வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்த மத்திய நேரடி வரிகள் வாரியம் தலைவர், வருமான வரித்துறையில் உள்ள ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்கள் ஆன்லைன் வாயிலாக தங்களது அசையா சொத்து விவரங்களை வெளியிடுகின்றனர் என்றும், மத்திய அரசின் ஒட்டுமொத்த ஊழியர்களின் சொத்துக் கணக்கை காட்ட வேண்டும் என்று எங்களால் உத்தரவிட முடியாது என்றும், அந்தந்த துறைகளின் தலைமைதான் முடிவு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழக அரசு சார்பில் தலைமை செயலர், உள்துறை செயலர் ஆகியோர் தாக்கல் பதில் மனுவில், தமிழக அரசு ஊழியர்கள் பணி ஒழுக்க விதிகளின்படி, தங்கள் பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயர்களிலும் சொத்துக்களை வாங்கினாலும், விற்பனை செய்தாலும், அதன் விவரங்களை தலைமை அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும் என விதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுதவிர 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்துப்பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மத்திய அரசின் உத்தரவின்படி, ஒவ்வொரு ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் தங்களது அசையா சொத்துக்களை 'ஸ்பேரோ' என்ற ஆன்லைன் இணையதளத்தில் வெளியிடுவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை ஆன்லைன் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யும் நடைமுறை உள்ளதாகவும், ஐ.எப்.எஸ். அதிகாரிகளின் சொத்து விவரங்களை முதன்மை தலைமை வனபாதுகாவலரிடம் சமர்ப்பிக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆண்டுதோறும் அரசு ஊழியர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட முடியுமா என்று அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பிய இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் பி.முத்துக்குமார் , அரசு ஊழியர்கள் பணி ஒழுக்க விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊழியர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்கின்றனர் என்றும், அவற்றை இணையதளங்களில் வெளியிடுவது என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications